மேயர் பிரியா, சேகர்பாபு கைது.. தவெக அரசுக்கு எதிரான திமுக போராட்டத்தில் பரபரப்பு!
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் போலீசார் தடையை மீறி சென்னை புரசைவாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. இதேபோன்று சென்னை சைதாப்பேட்டையில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
தவெக அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் சரத்குமார். இவர் குறித்த வீடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐபிஎல் போட்டியின் போது, மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

மேயர் பிரியா, சேகர்பாபு கைது
தனது குழந்தைக்கு மாத்திரையை தூளாக்கி கொடுத்ததாக, அமைச்சர் சரத்குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கமும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இதற்கிடையே, அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. போலீசாரின் தடையை மீறி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் சென்னையில், திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இன்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் போலீசார் தடையை மீறி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை போலீஸார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
மா சுப்பிரமணியனும் கைது
இதே போன்று அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடந்தது. போலீசார் அனுமதி வழங்கப்படாததால், அனுமதியை மீறி போராட்டம் நடத்தியதாக மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தின் போது பேசிய சேகர்பாபு, "போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய்
அமைச்சர் தன் குழந்தைக்கு மாத்திரைக்காக என சொல்வது அப்பட்டமான பொய்.. அமைச்சர்களாக இருந்தாலும், எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி. உயர் ரக வகை போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் தான் இப்படி செய்வார்கள். இதற்கு ஏன் ரூபாய் நோட்டு.. கிரெடிட் கார்டை பயன்படுத்துவார்கள். மிகவும் புத்திசாலித் தனமாக உபயோகம் செய்பவர்கள் தான் இப்படி போதை பொருளை பயன்படுத்துவார்கள். எனவே மிகப்பெரிய அளவில் போதைப் பொருளை பயன்படுத்தி அதில் இருந்து தப்பிக்க இன்று ஏராளமான பொய்களை சொல்லி வருகிறார்" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications