தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு.. ஆளுநருடன் சபாநாயகர், அமைச்சர் திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது தினமும் ஒரு திருப்பத்தைச் சந்தித்து வருகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு எனப் பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைத் திடீரெனச் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான 'லோக் பவனில்' இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சபாநாயகருடன் தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் உடனிருந்தார்.

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
தமிழக அரசியலில் தற்போதைய முக்கியமான பேசுபொருளே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள்தான். அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோருக்கு எதிராக அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த அதிரடித் திருப்பங்களுக்கு மத்தியில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முறைப்படி அறிவித்தார். மேலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதுவரை அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அசாதாரண சூழ்நிலையில், சபாநாயகர் ஆளுநரைச் சந்தித்திருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
சந்திப்பின் பின்னணி
ஆளுநருடனான இந்தச் சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து சபாநாயகரும், அமைச்சரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
1. குதிரை பேரம் புகார் விளக்கம்: தவெக அரசின் மீது எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்படும் 'குதிரை பேரம்' புகார்கள் குறித்தும், அதற்குரிய உண்மைத் தன்மைகள் குறித்தும் ஆளுநரிடம் பேரவைத் தலைவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2. ராஜினாமா சர்ச்சை: அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை அவசரமாக ஏற்றதன் பின்னணியில் எழுந்த சட்ட ரீதியான சந்தேகங்களுக்கும், புகார்களுக்கும் இந்தச் சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
3. ஆளுநர் உரைக்கு நன்றி: தவெக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற கூட்டத்தொடரின் ஆளுநர் உரைக்கு முறைப்படி நன்றி தெரிவிப்பதும் இந்தச் சந்திப்பின் ஒரு முக்கிய நோக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதிகள் மற்றும் அனுமதி உள்ளிட்டவை குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடமும், தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரும் தமிழக அரசியலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்கின்றன. ஆளுநருடனான இந்தச் சந்திப்பு, வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் எந்தவித சலசலப்பும் இன்றி நடப்பதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications