ராத்திரி 10 மணி வரை மழை கொட்டப்போகுது.. சென்னை, மதுரை உள்பட 27 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாலை முதல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications