27 பவுன் நகை கொள்ளை.. நகைகளை வீட்டு ஓனரின் ஹேண்ட் பேக்கில் எடுத்து சென்ற மர்ம நபர்கள்
சென்னை: சென்னை திருவிக நகரில் 27 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை திரு.வி.க நகர் ஜார்ஜ் காலனி பாதம் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இன்று வீடு திரும்பியபோது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் இரண்டு அறைகளில் உள்ள பீரோ லாக்கர் உடைத்து அதில் இருந்த 27 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம், 1/2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
மேலும் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ள மர்மநபர்கள் சாமி பூஜை அறையில் படத்தில் இருந்த வெள்ளி பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். இவை அனைத்தையும் சீனிவாசனின் மனைவி அலுவலகத்திற்கு பயன்படுத்தும் பேக்கில் எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து திரு.வி.க. நகர் காவல் நிலையத்திற்கு சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications