பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு அரசு சார்பில் இனி மாதம் ரூ.3,000! சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்குவதற்கான ஆணையினை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.
பாரம்பரிய மருத்துவ முறைகளையும், மருத்துவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
2022-23ஆம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பை முதல்வர் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை- 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
இது தொடர்பான விவரம் வருமாறு;
பரம்பரை மருத்துவர்கள்
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினை களைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011ஆம் ஆண்டு ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து கோரிக்கை
தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்தபட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவே தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ.1,000-லிருந்து ரூ.3,000- ஆக உயர்த்தி வழங்கிட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
மானியக் கோரிக்கை
அதன் அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000- ஓய்வூதியம், நடப்பு ஆண்டு முதல் ரூ.3000- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல்வர் வழங்கினார்
அதன்படி, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.3000-க்கான ஆணைகளை பரம்பரை மருத்துவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.