விஜய்க்கு ஒரே நாளில் மூன்று சிக்கல்.. ஒன்றுக்கு 'அவரே' காரணம்.. மற்ற இரண்டும் அமைச்சர்கள்
சென்னை: தமிழகத்தை காக்க சூப்பர் ஹீரோ வருகிறார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு. தமிழ்நாட்டின் சினிமா உச்ச நட்சத்திரங்களில் ஒருவரும், சூப்பர் ஹீரோவுமான விஜய்யே களம் கண்டதால், அவருக்காக பெயர் தெரியாதவர்களை கூட ஜெயிக்க வைத்தார்கள் தமிழ்நாட்டு மக்கள். ஒட்டபோட்ட 99 சதவீதம் மக்களுக்கு யார் வேட்பாளர், என்ன சாதி என்ன மதம், அவர்களின் பின்புலம் எதுவுமே தெரியாது.. விஜய் என்ற ஒருவரை நம்பித்தான் வாக்களித்தார்கள். அப்படிப்பட்ட மக்களுக்காக விஜய் எப்படி முடிவெடுத்திருக்க வேண்டும். ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு அரசின் பிரநிதிதி என்ற பதவி தருவதற்கு முன்பு குறைந்தபட்சம் இந்த முடிவினை சுற்றியுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளிடமாவது கேட்டு வில்லங்கம் வருமா.. அதனை கூட்டணி கட்சிகள் எப்படி பார்க்கும்.. மக்கள் என்ன நினைப்பார்கள்... என்று பார்த்திருக்க வேண்டும். விஜய் அப்படி யோசித்து இருந்தால், இப்படி ஒரு சிக்கலே வந்திருக்காது.
டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் யார்
டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் ஒவ்வொரு மாநிலமும் நியமிக்கும் கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவியாகும். இந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தான் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய பாலமாக விளங்குவார். இப்பதவிக்கு முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அல்லது சட்டம் பயின்றவர்களை தமிழக அரசு நியமிப்பது வழக்கம் ஆகும்.

மாநில அரசுக்கு பாலம்
மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்திற்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட அனுமதிகளை விரைவுபடுத்துவதுதான் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் பணியாகும். மேலும், மாநில அரசின் கோரிக்கைகள் மற்றும் முக்கியப் பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்வார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்படுவார்.
தமிழக அரசின் பிரதிநிதி
அதேபோல் டெல்லியில் மத்திய அரசு நடத்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் தமிழக அரசு சார்பில் பங்கேற்பார். முதுல்வர் மற்றும் அமைச்சர்கள் டெல்லி செல்லும்போது தேவையான ஏற்பாடுகளையும் கவனிப்பவர் டெல்லி சிறப்பு பிரதிநிதி தான். இதுவரையில் டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஜக்கையன், செல்வேந்திரன், தளவாய் சுந்தரம் போன்றவர்கள் பணியாற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் ஏ.கே.எஸ்.விஜயன் அந்த பதவியில் இருந்து வந்தார்.
வெங்கட நாராயணா நியமனம்
இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியில் சினிமா தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் கடந்த 23-ந்தேதி அரசாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் தற்காலிக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி உருவாக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர் அந்தப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது தேவைப்படும் வரையிலோ, இதில் எது முதலில் நேர்கிறதோ அதுவரை அந்தப் பதவி இருக்கும். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். அந்த பதவி நியமனம் தொடர்பான மற்ற விவரங்கள் தனியாக வெளியிடப்படும் என்று கூறினார்.
ஜனநாயகன் தயாரிப்பாளர்
விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் வெங்கட நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. டெல்லி சிறப்பு பிரதிநிதியாக சினிமா தயாரிப்பாளரை தமிழக அரசு நியமித்திருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.. பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. விஜய் இந்த முடிவினை எடுக்கும் முன்பு குறைந்தபட்சம் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விவாதித்து இருந்தால் கூட, நம்மூரில் எப்படியான தாக்கம் ஏற்படும் என்பதை விவரித்திருப்பார்கள் என்பது அரசியல் கட்சிகளின் பதிலாக உள்ளது.
செங்கோட்டையன் பேச்சு
இந்த சிக்கல் ஒருபுறம் எனில் அமைச்சர் செங்கோட்டையன் சாதி சான்றிதழை ஐடி கார்டில் சேர்ப்போம் என்று பேசியதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். இதுவும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!
அன்பில் மகேஷ் கேள்வி
மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மாண்புமிகு அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும்" என்று அனபில் மகேஷ் கூறியுள்ளார். அன்பில் மகேஷ் மட்டுமின்றி பலரும் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
அமைச்சர் சரத்குமார்
மூன்றாவதாக அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் போட்டி நிகழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்து கொண்ட விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அது அவரது அமைச்சர் பதவிக்கே சிக்கலாக வந்து நின்றுள்ளது. மாத்திரையை பொடியாக்குவதாக அமைச்சர் சரத்தின் வீடியோ உள்ளது. அதனை போதைப்பொருள் என்று கூறி எதிர்க்கட்சி நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள். இதனை மறுத்துள்ள சரத்குமார், அது குழந்தைக்கு வழங்க வைத்திருந்த மாத்திரை என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு வயது குழந்தைக்கு மாத்திரை தரலாம் என்று எந்த டாக்டர் கூறினார். அப்படியே மாத்திரை என்றால் தக் லைப் என்று என்று வைத்தது ஏன் என்று சராமரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த மூன்று பிரச்சனையும் நேற்று ஒரே நாளில் எழும்பியவை தான். விஜய் தான் இந்த மூன்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவருக்கே சிக்கலாகவே முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.














Click it and Unblock the Notifications