சென்னை வேளச்சேரியில் பறிபோன 3 கோடி நிலம்.. போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடப்பது எப்படி?
சென்னை: ஹைதராபாத்தில் வசிக்கும் விஜய சாமுண்டீஸ்வரி என்பவருக்கு சொந்தமாக சென்னை வேளச்சேரி விஜயநகரில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து பறித்துவிட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி எப்படி நடக்கிறது.. எப்படி பத்திரப்பதிவு செய்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் 59 வயதாகும் விஜய சாமுண்டீஸ்வரி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறுகையில், சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியில் எனக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம், ஆள் மாறாட்டம் செய்து சிலர் அபகரித்து விட்டனர். நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள் போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

தனிப்படை விசாரணை
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் வரதராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஐந்து பேர் கைது
விசாரணையில், சென்னை வேளச்சேரி ராம் நகரை சேர்ந்த 49 வயதாகும் மேகநாதன் என்பவர் நில அபகரிப்புக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் ஹைதராபாத் பெண்ணின் நிலத்தை அபகரிக்க முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த யசோதா (59), பழனி (43) மற்றும் அயப்பாக்கத்தை சேர்ந்த வனிதா (40) ஆகியோர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த நில அபகரிப்புக்கு ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அருணாசலம் (42), என்பவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கண்ட 5 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பூந்தமல்லியில் நிலம்
இதேபோல் சென்னை நந்தம்பாக்கம் கணபதி காலனியை சேர்ந்த 53 வயதாகும் ராஜி மற்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி அம்மாள் ஆகிய இருவரும் பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் கிராமத்தில் 10.33 சென்ட் நிலத்தை வாங்கி அனுபவத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த இடத்தை வில்லங்கச் சான்று போட்டு பார்த்த போது இடத்தின் ஆவணத்தில் திருத்தம் செய்து போலியாக ஆனந்தி பெயரில் ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மெண்ட் செய்யப்பட்டு இருந்தது.
5 சென்ட் நிலத்தில் வீடு
அதேபோல் அதில் 5 சென்ட் நிலத்தை செந்தில்குமார் என்பவர் ஆக்கிரமித்து நிலத்திற்கு செல்லும் பாதையில் வீடு கட்டி ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ராஜி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மோகன் (67), பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தி (38), செந்தில்குமார் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை எளிதாக ஆக்கிரமிக்க முடியாது. ஏனெனில் ஆதார் காடு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் ஒடிபி போன்றவை இன்று தேவைப்படுகிறது. எனினும் போலியாக ஆவணங்கள் தயாரிப்பவர்கள் எப்படிப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் என்றால், ஆள் இல்லாத நிலம், உரிமையாளர் அருகில் இல்லாமல் வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலத்தில் அல்லது வெளிமாவட்டத்தில் வசிப்பவர்களாக இருப்பார்கள். அதுவும் அவர்கள் பெண்களாக அல்லது வயதானவர்களாக இருப்பார்கள். இவர்களின் நிலத்தை தான் குறிவைப்பார்கள்.
எப்படி நடக்கிறது
பின்னர், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய போலி ஆதார் கார்டு, போலி பான்கார்டு உருவாக்குவார்கள். அதைவைத்து பத்திரப்பதிவு செய்து விடுவார்கள். நிலத்தை வாங்குவோருக்கு எந்த சந்தேகம் வராத வகையில் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். உண்மை எப்போது தெரியும் என்றால், நிலத்தின் உரிமையாளர் வந்து பார்த்த போது தான் தெரியவரும். அதேநேரம் நிலத்தை வாங்க போகிறவர் ஈசி போட்டு பார்த்தால் தான் வில்லங்கம் தெரியவரும். அதுவரையில் அவருக்கும் தெரியவராது. இப்படித்தான் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்கிறார்கள். எனவே அடிக்கடி உங்கள் நிலம் உங்கள் பெயரில் உள்ளதா என்பதையும், யாரும் ஆக்கிரமிக்க முயல்கிறார்களா என்பதையும் பாருங்கள். இல்லாவிட்டால் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications