பக்ரீத் பண்டிகை! அடடா லாங்ங்ங் வீக் எண்ட்! காலண்டரை பார்த்தீர்களா? மினி டூர் போக பிளான் ரெடியா?
சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் எங்கும் செல்லலாம் என இப்போதே பிளான் செய்ய தொடங்கிவிட்டார்கள்.
பக்ரீத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த முறை திங்கள்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் வருகிறது.

இதனால் இப்போதே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெடியாக வருகிறார்கள். நாளை மாலை முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதும். அது போல் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றும் இடங்களிலும் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் குறித்து ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜூன் 14, 15, 16 விடுமுறை மற்றும் 17-ம் தேதி (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 545 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை, நாளை மறுநாள் தலா 15 பேருந்துகளும் என 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திங்களன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
பொதுவாக வார இறுதிநாளுடன் பண்டிகை விடுமுறை வந்தால் மக்கள் குஷியாகிவிடுவார்கள். இதை முன் கூட்டியே காலண்டரை பார்த்து தெரிந்து வைத்துக் கொண்டு பிளான் போட்டு சுற்றுலா தலங்களுக்கோ ஆன்மீக தலங்களுக்கோ மக்கள் புறப்பட்டு செல்கிறார்கள். அந்த வகையில் இந்த பக்ரீத் விடுமுறையையும் கொண்டாட்ட மோடிற்கு கொண்டு செல்ல தயாராகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications