துப்பு துலங்கியது.. பாகிஸ்தான் உள்ளே தவறுதலாக பறந்த இந்திய ஏவுகணை.. 3 ஏர்போர்ஸ் அதிகாரிகள் நீக்கம்!
சென்னை: பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக சென்ற விவகாரத்தில் 3 விமானப்படை அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த மார்ச் 9ம் தேதி இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது. இரண்டு நாடுகளிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தியது.
மற்ற சமயங்களில் இது போன்ற விஷயங்கள் போரை உருவாக்கும். ஆனால் இரண்டு நாடும் இதை சமயோஜிதமாக கையாண்டது.
அவசரப்படாமல் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை அமைதியாக கையாண்டது. இந்தியாவும் உடனுக்குடன் இதற்கு பதில் அளித்ததால் பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது.
பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ தூரம் வரை இந்த பிரம்மோஸ் ஏவுகணை சென்றது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளது.

சேதம் இல்லை
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்த ஏவுகணை எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. முதலில் இந்தியாவின் சிர்சா பகுதியில் இது ஏவப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்திய தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் சிர்சா ஏவுகணை தளத்தில் இருந்து இது ஏவப்படவில்லை. மாறாக பிரம்மோஸ் ஏவுகணை ரகசிய சாட்டிலைட் ஏவுதளம் ஒன்றில் இருந்துதான் ஏவப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் இந்த ஏவுகணையை டிராக் செய்ய முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பராமரிப்பு பணியின் காரணமாகவும் இந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

என்ன ஏவுகணை
இதில் குண்டுகள், ஆயுதங்கள் இல்லை என்பதால் சேதம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் Inter-Services Public Relations பிரிவின் இயக்குனர் பாபர் இப்திக்கார் பேட்டி அளித்துள்ளார். இந்த ஏவுகணை 3 மேக் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ மீட்டர் வரை வந்தது. ஏவப்பட்ட நேரத்தில் இருந்து 6.46 நிமிடங்கள் இது பறந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தது. இந்த ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை ஆகும். இது ஆயுதம் பொருத்தப்பட்டது அல்ல. பயிற்சிக்காக தயார் நிலையில் இருந்த practice version பிரம்மோஸ் ஆகும்.

துறை ரீதியான விசாரணை
இந்த சம்பவத்தை தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார். இதன் அடிப்படையில் துறை ரீதியாக தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் 3 விமானப்படை அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ஒரு கேப்டன், இரண்டு விங் கமாண்டோ உள்ளிட்டோர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை
பொதுவாக பிரம்மோஸ் என்று இல்லாமல் எந்த ஏவுகணையாக இருந்தாலும் அதை ஏவுவதற்கு 3 ஒப்புதல்கள் வழங்கப்பட வேண்டும். இதுதான் எஸ்ஓபி. வெறுமனே ஒரு அதிகாரி நினைத்தால் ஏவுகணைகளை ஏவ முடியாது. ஆனால் இதையும் மீறி ஏவுகணை ஏவப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது . இந்த நிலையிலேயே விசாரணையில் 3 அதிகாரிகள் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications