அதிமுக வேண்டாம், தவெக வேண்டவே வேண்டாம்! செங்கோட்டையனை போல் மாற்றி யோசிக்கும் எஸ்.பி.வேலுமணி?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொங்கு மண்டலத்தில் அதிகச் செல்வாக்குக் கொண்டவர் என்பதால் அவரை தவெகவில் இணைக்க முயற்சிகள் நடப்பதாகவும் ஆனால் அவரோ தவெகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று புது ரூட்டில் பயணிக்க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை பெற்று காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக அமைச்சரவையில் இடதுசாரிகளை தவிர மற்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பொதுவாக சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்றால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே மாறி மாறி வெற்றி பெறும். இதனால் எப்படியும் 10 ஆண்டுகள் கழித்தாவது தங்களுக்கு அதிகாரம், பதவி கிடைக்கும் என இரு கட்சியினரும் பொறுமை காப்பார்கள். அதிலும் திமுகவை விட அதிமுகவினருக்கு பதவியில்லாமல் இருக்க மாட்டார்கள் என ஏராளமான அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அதிமுக- திமுக இணைந்து கூட்டணி ஆட்சி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. எம்ஜிஆர் திமுகவை எதிர்த்துதான் அதிமுகவை ஆரம்பித்தார். அப்படியிருக்கும் போது திமுகவுடன் கூட்டணியா என அதிமுகவினர் பலர் எதிர்த்தனர்.
இதனால் பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார்கள். அந்த வகையில் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
இடைத்தேர்தல்களில் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பை முதல்வர் விஜய் அளிப்பாரா என தெரியவில்லை. இப்படி இருக்க சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பதால் அவர்களும் தவெகவில் இணையலாம் என்கிறார்கள்.
ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, தவெகவுக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் கொங்கு மண்டலத்தில் முக்கிய புள்ளியாக இருப்பதால் அவரை தவெகவில் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் வேலுமணி பிடி கொடுக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படியென்றால் அவர் அதிமுகவிலேயே இருக்க போகிறாரா என்றால் இல்லை! புது ரூட்டை பிடிக்க போகிறாராம். ஆம்! அண்ணாமலையின் இயக்கத்திற்கு பெரிய ஆதரவு இருப்பதால் அங்கு சென்றுவிடலாமா என யோசிக்கிறாராம்.
தவெகவில் சென்று பத்தோடு பதினொன்றாக இருப்பதற்கு பதில் அண்ணாமலை கட்சிக்குச் சென்றால் அங்கு ஒரு முக்கிய பதவியில் கவுரவமாக இருக்கலாம் என்பது அவரின் எண்ணமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அண்ணாமலை விரைவில் மாநாட்டை நடத்தி அதன் பிறகு கட்சியை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறாராம். அப்படி அண்ணாமலை மட்டும் கட்சி தொடங்கினால் நிச்சயம் அதிமுகவில் இருந்து பலர் அங்கு செல்வர் என சொல்லப்படுகிறது.
ஆனால் அண்ணாமலையே அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வருகின்றன. இது உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை யாரோ கிளப்பி விட்டுள்ளனர். புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை ஏன் அதிமுகவுக்கு செல்ல போகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
எப்படி அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெகவில் இணைந்து இன்று அமைச்சராகி, அவை முன்னவராகவும் இருக்கிறார். அன்று புதிய கட்சியான தவெக இன்று ஆளும் கட்சியாக இருக்கிறது. எனவே இந்த மூத்த முன்னோடி செங்கோட்டையனின் வழியை பின்பற்றி அண்ணாமலை கட்சியில் இணைகிறார் வேலுமணி? காலம்தான் பதில் சொல்லும்!












Click it and Unblock the Notifications