கனிமொழி காரின் முன்னால் சென்ற லாரி மோதி விபரீதம்! தாய் முன்னே டூவீலரில் போன 12ம் வகுப்பு மாணவன் பலி
சென்னை: தாயுடன் மீன் வாங்குவதற்காக சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார் பள்ளி மாணவன்.. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் சிக்கி விபத்துக்குள்ளானார்.. அந்த நேரம் பார்த்து காரில் சென்று கொண்டிருந்த திமுக எம்பி கனிமொழி உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்... திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகும் உதவியாளர் மூலம் நலம் விசாரித்த கனிமொழி, மாணவனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்துபோனார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று நடந்த இந்த விபத்துதான், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது.

மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி சுந்தரி. இந்த தம்பதியின் ஒரே மகன் ரித்திஷ் குமார்.. 18 வயதாகிறது.. இவர் 12ம் வகுப்பு படித்து வருபவர்..
சென்னை வானகரம் மீன் மார்க்கெட்
நேற்று ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், மீன் வாங்குவதற்காக வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு தன்னுடைய அம்மாவுடன் டூவீலரில் சென்றுள்ளார்.. ரித்திஷ் குமார் பைக்கை ஓட்ட, அம்மா சுந்தரி பின்சீட்டில் உட்கார்ந்திருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வானகரம் மீன் மார்க்கெட் அருகே சாலையை கடப்பதற்காக பைக்கை திருப்பியுள்ளனர். அப்போது கோயம்பேட்டில் இருந்து வந்த ஒரு லாரி, இவர்களது டூவீலர் மீது பலமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் தாயும் மகனும் தூக்கி வீசப்பட்டனர்.. இதில் மாணவன் ரித்திஷ் குமார் லாரியின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.. உயிருக்கும் போராடி கொண்டிருந்தார்.
பதறிய கனிமொழி
அந்த நேரத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி, திருவேற்காட்டில் நடக்கும் கட்சி பிரமுகர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்ச்சிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். கனிமொழியின் காருக்கு கொஞ்சம் முன்னால் சென்ற லாரிதான் இந்த கோர விபத்தை ஏற்படுத்தியது.. தன் கண்முன்னாடியே லாரி சக்கரத்தில் இளைஞர் சிக்கித் தவிப்பதைப் பார்த்ததும் கனிமொழி பதறிப்போனார்... ஒருசெகண்ட் கூட யோசிக்காமல் உடனடியாகத் தனது காரை நிறுத்தச் சொன்னார்.
கார் கதவைத் திறந்து கொண்டு அவசரமாக இறங்கிய கனிமொழி, விபத்து நடந்த இடத்திற்கு ஓடிவந்தார். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து அதிர்ந்த அவர், உடனே அங்கிருந்த போலீசாரை முடுக்கிவிட்டு மீட்புப் பணிகளைத் தானே முன்னின்று கவனித்தார்.
லாரி சக்கரத்தில் சிக்கியிருந்த மாணவனை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.
தமிழன் பிரசன்னா
அதே நேரத்தில், தனக்குப் பின்னால் திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் கார் வருவதைப் பார்த்த கனிமொழி, அந்த காரை நிறுத்தச் சொல்லி, பலத்த காயமடைந்திருந்த மாணவனின் தாயை உடனடியாக அந்த காரில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு டிரைவரிடம் சொன்னார்.. விபத்தில் சிக்கிய 2 பேரும் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதை உறுதி செய்த பிறகே, கனிமொழி அங்கிருந்து திருமண நிகழ்ச்சிக்கு கிளம்பிச் சென்றார்.
அதிர்ச்சியில் கனிமொழி
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோதும்கூட, தனது உதவியாளர் மூலம் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார். அப்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவன் ரித்திஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி எம்பி, மகனை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சக்திவேல் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மீன் வாங்கச் சென்ற இடத்தில், கண்முன்னே நடந்த விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...!!












Click it and Unblock the Notifications