சென்னையில் கதறிய வடமாநில சிறுவர்கள்.. பெண் வீட்டுக்குள் ஏறிக்குதிக்க முயன்றதால் தாக்குதல் - பரபரப்பு
சென்னை: சென்னையில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் சுவர் ஏறிக்குதித்து செல்ல முயன்ற புகாரில் வடமாநிலத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடமாநிலங்களான பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களின் குடும்பத்துடன் தமிழகம் வந்து வேலை செய்து வருகின்றனர்.

வடமாநிலங்களில் போதிய அளவுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்கள் தமிழகத்தில் வேலை தேடி வந்து பணி செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் அவர்களுக்கு சம்பளத்துடன் தங்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் தமிழகம் வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையை எடுத்து கொண்டால் பாலம் கட்டும் பணி, மெட்ரோ பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பானிப்பூரி, சாத்துக்குடி ஜூஸ் விற்பனை, குல்பி ஐஸ் விற்பனை, பஞ்சு மிட்டாய் விற்பனையில் வடமாநில தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் இளைஞர்கள் தனியாக வசித்து வரும் நிலையில் திருமணம் ஆனவர்கள் தங்களின் மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது பொதுமக்கள் 3 வடமாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் என்பது சென்னை ஆவடி பகுதியில் நடந்துள்ளது. ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் ராஜம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் இன்று தனியாக இருந்துள்ளார்.
அப்போது இந்த 3 சிறுவர்களும் தனியாக இருக்கும் பெண்ணின் வீட்டின் சுவர் ஏறி குதிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அவர்கள் சரியாக பதிலளிக்காத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர்கள் 3 பேரும் கதறி அழுதனர். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து 3 சிறுவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
அந்த சிறுவர்கள் யார்? எதற்காக தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் ஏறிக்குதிக்க முயன்றனர்? என்பது பற்றிய விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இன்று ஆவடி பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications