டெல்லியில் சிக்னல் கொடுத்ததும், தமிழக ஆம் ஆத்மி கூண்டோடு காலி.. பாஜகவுக்கு தட்டித் தூக்கிய அண்ணாமலை!
சென்னை: தமிழக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார். இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. ஆம் ஆத்மி - பாஜக இடையே தொடர்ச்சியாக கடும் வார்த்தை மோதல்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியினரை பாஜக இழுக்க முயன்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் சிலர் பாஜகவில் இணைந்தனர். டெல்லி பாஜக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சியின் சதார்பூர் தொகுதி எம்எல்ஏ கர்த்தார் சிங் தன்வார், டெல்லி முன்னாள் அமைச்சரும் படேல் நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ராஜ் குமார் ஆனந்த் மற்றும் படேல் நகர் தொகுதியின் மற்றொரு முன்னாள் எம்எல்ஏ வீனா ஆனந்த் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
தமிழக ஆம் ஆத்மி கட்சியினர்: இந்நிலையில் இன்று தமிழ்நாட்டிலும், தமிழக ஆம் ஆத் கட்சி நிர்வாகிகள் சிலர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் தமிழ்நெஞ்சம் தலைமையில், சுமார் 40 நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியினர்: தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் சரவணன், வடசென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

அண்ணாமலை வரவேற்பு: இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் T.K.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications