விடுதலை! சிறைவாசத்துக்கு பின் இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய 32 தமிழக மீனவர்கள்
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களில் 32 போ் விடுவிக்கப்பட்டு இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினா்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழக கடல் எல்லையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள், மயிலாடுதுறையை சேர்ந்த 2 மீனவா்கள், காரைக்காலை சேர்ந்த 4 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது இலங்கை கடற்படையினர் அந்தந்த பகுதிகளில் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 34 பேரையும் கைது செய்தனா்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்ற கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் பதறிப்போன மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர் சங்கத்தினர் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினார்.

சிறையிலிருந்து விடுதலை
இதையடுத்து மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் 34 தமிழக மீனவர்களையும் சிறையிலிருந்து விடுவித்தது. இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 34 மீனவா்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 34 பேரையும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

2 தமிழக மீனவர்களுக்கு கொரோனா உறுதி
ஆனால், 34 மீனவா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 2 மீனவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து 2 மீனவா்களும் சிகிச்சைக்காக இலங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்ற 32 மீனவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவசர சான்றிதழ்களை வழங்கினா். இதையடுத்து இந்த 32 மீனவர்களும் இலங்கையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று அதிகாலை 4:20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனா்.

சென்னை வந்தடைந்த 32 மீனவர்கள்
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் மீனவர்களிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தி காலை 6:30 மணிக்கு வெளியே அனுப்பினா். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக மீனவர் நலத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தனித்தனி வாகனங்களில் மீனவர்கள் ராமேஸ்வரம், ராமநாதபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications