ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகை பயிற்சிகள்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் கல்வியின்
தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதாவது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகையான
பயிற்சிகள் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
விதி எண். 110ன் கீழ் அறிவிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண்.
110ன் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் கல்வித்
தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி
பயிற்சிகள் அளிப்படும் என்ற அறிவித்திருந்தார்கள்.
35 பயிற்சிகள்
இதற்காக முதற்கட்டமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி
ஆசிரியர்களுக்கு 35 விதமான பயிற்சிகள் அளிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு
அரசு பிறப்பித்துள்ளதாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திட்டடத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு
கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி, ஆங்கில இலக்கணம், செயல்வழி
கற்றல், புதிய பாடத்திட்டம், ஆங்கிலப் பேச்சாற்றல், கணினி, அறிவுத்திறன்
உள்ளிட்ட 35 வகையான பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
1,464 பள்ளிகள் பயன்பெறும்
இந்த திட்டத்தால் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையின் கீழ்
இயங்கும் 1,138 ஆதி திராவிடர் நல பள்ளிகள், 318 அரசு பழங்குடியினர் உண்டி
உறைவிட பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட
1,464 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று தங்களது
கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்வர்.
சமூக அளவில் உயர திட்டம்
சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியின
இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி
அவர்களுக்கு உரிய கல்வி அளித்து முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்
இவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை
செயலல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளம் வயதில் இருந்தே மாணக்கர்கள்
ஆங்கில இலக்கணம், பேச்சாற்றல், கணினி போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்
என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.