மாஸ் காட்டிய அதானி குழுமம்.. ஒரே வாரத்தில் 15 பில்லியன் டாலர் முதலீட்டு ஒப்பந்தங்கள் ஈர்ப்பு
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.25 லட்சம் கோடிக்கும் மேல்) மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. சமீப ஆண்டுக்ளில் அதானி குழுமம் மேற்கொண்ட மிகப்பெரிய நிதி திரட்டல் மற்றும் விரிவாக்க நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. அமெரிக்காவில் நிலுவையில் இருந்த சட்டப் பிரச்சினைகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் மீது சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரித்து இருப்பதையே இந்த முதலீடுகள் வெளிப்படுத்துவதாக சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். துறைமுகங்கள், சுரங்கங்கள், உற்பத்தித் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் அதானி குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம்
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ், முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது பங்கு விற்பனை மூலம் திரட்டவிருந்த தொகையை 50 சதவீதம் உயர்த்தி ரூ.15,000 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த முதலீட்டில் கேபிடல் குரூப், கோல்ட்மேன் சாக்ஸ், வான்கார்ட், பிளாக்ராக் உள்ளிட்ட முன்னணி சர்வதேச நிறுவன முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (IHC) நிறுவனத்துடன் இணைந்து, கிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி ஆலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் அதானி என்டர்பிரைசஸ் கையெழுத்திட்டுள்ளது.
மேலும், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் நிறுவனமும், உலகின் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி உடன் 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் 49 சதவீத பங்குகளை எம்.எஸ்.சி. நிறுவனம் வாங்க உள்ளது. இந்த தொடர் முதலீட்டு அறிவிப்புகள் அதானி குழுமத்தின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரித்திருப்பதை காட்டுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை
இதுகுறித்து நைக்கா அட்வைசரி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் சந்திரமணி கூறுகையில், "பாதுகாப்பு அணுகுமுறையில் இருந்து அதானி குழுமம் தற்போது விரிவாக்கத்தை நோக்கிய வளர்ச்சி திட்டங்களுக்கு மாறியுள்ளது. சமீபத்திய நிதி திரட்டல் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள், குழுமத்தின் நீண்டகால உள்கட்டமைப்பு வளர்ச்சியில் சர்வதேச முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்துகின்றன" என்றார்.
சமீபத்தில் அமெரிக்காவில் அதானி குழுமம் எதிர்கொண்டிருந்த பல்வேறு சட்டப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளன. தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது லஞ்சம் தொடர்பான வழக்கில் தொடரப்பட்டிருந்த கிரிமினல் குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றது. அதேபோல், அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEC) தொடர்ந்திருந்த சிவில் மோசடி வழக்கும் நிதி சமரசம் மூலம் முடிவுக்கு வந்தது. தடைகள் தொடர்பான மற்றொரு விசாரணையும் நிறைவடைந்தது.
மேலும் வேகப்படுத்தும்
கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலீட்டாளர்களின் எண்ணத்தை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்த இந்த சட்டச் சிக்கல்கள் தற்போது நீங்கியுள்ளதன் காரணமாக, முதலீட்டுக்கு உகந்த சூழல் மீண்டும் சாதகமாக மாறியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சில சவால்கள் நீடிக்கின்றன. அதாவது, விழிஞ்சம் துறைமுகத்தில் எம்.எஸ்.சி. நிறுவனத்தின் முதலீடு குறித்து கேரள அரசு கேள்வி எழுப்பியுள்ளது. மாநில அரசிடம் முன்கூட்டியே ஆலோசிக்காமல் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கேரள அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
2023-ஆம் ஆண்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளால் பாதிக்கப்பட்டிருந்த அதானி குழுமம், 2026-ஆம் ஆண்டில் மீண்டும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.
மேலும், கவுதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்து, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்த புதிய முதலீடுகள், உள்கட்டமைப்பு, தளவாடம், எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் அதானி குழுமத்தின் விரிவாக்கத்தை மேலும் வேகப்படுத்தும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications