அசத்திட்டீங்க.. சி விஜயபாஸ்கரை புகழ்ந்த முதல்வர் விஜய்! பனையூர் மீட்டிங்கில் நடந்தது என்ன?
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் சென்னை பனையூரில் இன்று விஜய்யை சந்தித்து பேசினர். அப்போது விஜய், தன்னை பார்த்து அசத்திட்டீங்க என்று கூறியதாக சி விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், இனி எந்த தேர்தல் வந்தாலும் எல்லா தேர்தலிலும் தவெக வெற்றி பெறும் என்று கூறினார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்று முதல்வர் விஜய்யை சந்தித்தனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜுவும், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்யை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

இனி எந்த தேர்தல் வந்தாலும்..
அதிகாரத்தால் நாட்டை ஆள்வது வேறு.. மக்களுடைய அன்பால் அன்பை வெல்வது வேறு.. சாமானிய மக்களின் அன்பை வென்றுள்ள, மாற்றத்தின் சக்தியாக உள்ள தலைமைப்பண்பு கொண்ட.. ஒவ்வொருவரையும் பார்த்து.. கட்டியணைத்து அன்பாக வார்த்தைகளை பேசி அப்படியெல்லாம் இன்றைய நிகழ்வு மனதிற்கு இதமான நிகழ்வாக, இந்த சந்திப்பு அமைந்துள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் எல்லா தேர்தலிலும் தவெக வெற்றி பெறும்.
நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவிடம் பாடம் பயின்றவர்கள். நாங்கள் அதே தொலைநோக்கு திட்டம், இலக்குடனுடன் தவெக கொள்கைகளுக்கு ஏற்ப வெற்றிக்கு பங்கெடுக்கும் பணியை நிறைவாக செய்வோம். குதிரை பேரம் மூலமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் இணைவதாக எதிர்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் என்ன செய்யும். எதிர்க்கட்சிகள் அவர்கள் அரசியல் செய்வார்கள்" என்றார்.
அசத்திட்டீங்க என சொன்னார்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இணைப்பு விழா குறித்து முதல்வர் விஜய் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சி.விஜயபாஸ்கர், "அசத்தீட்டிங்க" என்று கூறியதாக கூறினார். எதிர்க்கட்சிகளின் வாஷிங்மெசின் குற்றசாட்டு குறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- இந்தியா முழுவதும் என்ன நடைபெற்று கொண்டு இருக்கிறது. எத்தனை வாஷிங் மெஷின் எங்கெங்கோ போய்க்கொண்டு இருக்கிறது.
ஏதாவது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போடுவது வழக்கம். எந்த கேஸ் வந்தாலும் அரசியல் வாதிகள் சந்திக்க தயாராக இருக்கிறார்கள். அதேவகையில்தான் இன்று எல்லாவற்றையும் சந்திப்பதற்கு தயாராக உள்ளோம். நாங்கள் ஓடி ஒளியவில்லை. நீதிமன்றத்தில் இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இப்படி சொல்கிறார்கள்.
அவர்கள் கூட இருக்கும் வரை நாங்கள் நல்லவர்கள்.. வெளியேறிவிட்டால் துரோகிகள்.. இதெல்லாம் என்ன நியாயம். எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களை வரவேற்பதற்கு ஒரு இயக்கம் இருக்கிறது. நாங்கள் சேர்கிறோம்" என்றார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சி
கடந்த வியாழக்கிழமை தவெகவில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகிய இரண்டு பேரும் தவெகவில் தங்கள் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தவெகவில் இணைந்தனர். இதற்கான விழாவை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட மாக நடத்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தொண்டர்கள் சாரை சாரையாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
தவெகவில் இணைய வந்தவர்கள் காலை 8 மணிக்கே ஓட்டலில் உள்ள அரங்கத்தில் அமர வைக்கப்பட்டனர். ஹோட்டலில் போடப்பட்டுள்ள ஒவ்வொரு இருக்கையிலும் த.வெ.க. துண்டு, விஜய் புகைப்படத்துடன் கூடிய பையில் நொறுக்குத்தீனிகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. வெகு பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில்தான், சி. விஜயபாஸ்கரை விஜய் பாராட்டியதாக தெரிகிறது.














Click it and Unblock the Notifications