சிவகங்கையில் ஜாலியோ ஜாலி.. தெருநாய்களிடம் தப்பி துள்ளிக் குதித்து ஓடிய புள்ளிமான்.. சுப்பையா நிம்மதி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில், தெருநாய்கள் ஒன்று சேர்ந்து 2 வயது புள்ளிமான் ஒன்றை துரத்தி வந்துள்ளன.. அந்த புள்ளிமான் பயந்து நடுங்கி ஓடுவதை பார்த்து கிராம மக்கள் பதறிப்போய்விட்டார்கள்.. இதுதொடர்பான வீடியோதான் இணையத்தில் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பிரான்பட்டி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சிங்கம்புணரி பகுதி எஸ்.புதூர் அருகே உள்ளது பிரான்பட்டி கிராமம்.. இங்கு சுப்பையா என்பவர் வசித்து வருகிறார்.. இவரது வீட்டின் பின்புறப் பகுதிக்கு புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. சுமார் 2 வயது மதிக்கத்தக்க அந்த மான், கிராம எல்லைக்குள் நுழைந்ததுமே, அங்கிருந்த தெருநாய்கள் கவனித்து விட்டன..

சிவகங்கை சிங்கம்புணரி பகுதி
அடுத்த நிமிடமே அத்தனை தெருநாய்களும் அந்த புள்ளிமானை துரத்த தொடங்கின.,. இதனால் பயந்து நடுங்கிய அந்த புள்ளிமான், அங்கிருந்து எகிறி தப்பி ஓடிவந்து, சுப்பையாவின் வீட்டின் பின்புறத்தில் தஞ்சமடைந்தது.. மான் ஓடி வருவதை கண்டு பின்தொடர்ந்த நாய்கள் சுப்பையாவின் வீட்டை சூழ்ந்து கொண்டன.
திடீரென நாய்களின் வித்தியாசமான சத்தத்தை கேட்டு, வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தார் சுப்பையா,.. நாய்கள் மானை துரத்துவதை கண்டு, உடனடியாக அந்த நாய்களை அங்கிருந்து விரட்டினார்...
பிறகு அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பைசூர் முகமது என்பவருக்கு இந்த தகவலை சொல்லி உடனடியாக வரவழைத்தார்.. அவரும் சம்பவ இடத்திற்கு வந்து, சுப்பையாவின் உதவியுடன் அந்தப் புள்ளிமானை பாதுகாப்பாக மீட்டார்.. பிறகு இதுகுறித்து சிங்கம்புணரி வனத்துறை அலுவலகத்திற்கு உடனடியாகத் தகவல் கொடுத்தார்.
மகிழ்ச்சியுடன் துள்ளி எழுந்த புள்ளிமான்
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வன அலுவலர் வாசுகி தலைமையிலான வனக் காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுவினர் பிரான்பட்டி கிராமத்திற்கு வந்தனர். கிராம மக்கள் பாதுகாப்பாக வைத்திருந்த புள்ளிமானை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அந்த மானை வன அலுவலர்கள் பரிசோதித்து பார்த்தார்கள்.. நல்லவேளையாக , மானின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை.. அது ஆரோக்கியமாக இருப்பதுடன் மகிழ்ச்சியுடன் துள்ளி எழுந்ததையும் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
காயமடையும் மான்கள்
இதையடுத்து மீட்கப்பட்ட புள்ளிமானை வனத்துறையினர் தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்று, அருகிலுள்ள பிரான்மலை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர். ஆபத்தான சூழலில் வனவிலங்கை மீட்க உதவிய கிராம மக்களை வனத்துறையினர் பாராட்டினார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் பைசூர் முகமது, "இப்போது கடுமையான வெப்பநிலை நிலவுகிறது.. அதனால் 1 முதல் 2 வயது வரை உள்ள புள்ளிமான்கள் வறட்சி தாகத்துக்காக, கூட்டமாகவும், சில நேரங்களில் தனித்தனியாகவும், காடுகளை விட்டு வெளியே வந்து உணவும் தண்ணீரும் தேடி கிராமப்புறங்களுக்கு வருகின்றன.
அப்படி வரும் மான்களை தெருநாய்கள் துரத்துவதால், அவை பயந்து சாலைகளில் ஓடி வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் கடுமையான காயங்களும் ஏற்படுகின்றன. அதனால் மான்கள் பாதுகாப்பாக வாழும் வகையில், அவை செல்லும் பாதைகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்தால், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications