விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி! சீனிவாசனுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! வெங்கடேஷ் பண்ணையார் இயக்கம்
சென்னை: தவெக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது. இது தெரிந்து இருந்தால் நாங்கள் அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்போம் என்று வீர கடவுள் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாடார் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் சீனிவாசனுக்கும், எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளது.
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக யூடியூபர் திருநாவுக்கரசு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் பல எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் இதற்கு ஒவ்வொரு எம்.எல்.ஏக்களிடமும் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இது தொடர்பு இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதர் அசோக்குமார் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

முற்றிலும் தவறான விஷயம்
கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக பிரமுகரும், நாடார் பாதுகாப்புப் பேரவைத் தலைவருமான சீனிவாசன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சீனிவாசனுக்கும் எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று வீர கடவுள் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி மன்ற இயக்கத்தின் மாநில செயலாளர் ஓகை செல்வன் கூறியதாவது:-
மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி மன்ற இயக்கத்தின் மாநில செயலாளராக இருக்கின்றேன். சமீப காலமாக, இரண்டு மூன்று நாட்களாக ஒரு நியூஸ் ஓடிக்கொண்டு இருக்கு. சீனிவாசன் என்ற நபர் நாடார் பேரவை.. பண்ணையார் அவர்களுடைய ஆதரவாளர் என்று செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இது முற்றிலும் தவறான விஷயம். முதன் முதலில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை என்ற நிறுவனத்தை வெங்கேஷ் பண்ணையார் ஆரம்பித்தார்.
புகார் அளிக்கப்படும்
அப்போது அண்ணன் சுபாஷ் பண்ணையார் இதில் பயணித்துக்கொண்டு இருந்தார். அதற்கு அப்புறம் எல்லாத்தையும் நிப்பாட்டிவிட்டு, கடந்த 4 வருஷமாக வீர கடவுள் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் என்று தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்கும் இதற்கு எந்த வித சம்பந்தமும் கிடையாது. சீனிவாசன் என்ற நபர், அண்ணன் படம், பெயரை போட்டுக்கொண்டு வருகிறார்.. அவரை தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
சீனிவாசனுக்கும் அண்ணனுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. வீர கடவுள் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் தான் செயல்படுகின்றதே தவிர வேறு எதுவும் செயல்படவில்லை. பண்ணையாரின் அனுமதியை கேட்டு தான் இந்த செய்தியாளர் சந்திப்பினை நடத்துகிறேன். இப்போது வரை சீனிவாசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கோரவில்லை. பண்ணையாரின் அனுமதியை கேட்டு அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்படும்.
அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இருப்போம்
அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கோம். யாருக்கும் நாங்கள் இந்த ஆண்டு தேர்தலில் வேலை பார்க்கவில்லை. திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, தவெகவுக்கோ என யாருக்கும் வேலை பார்க்கவில்லை. அமைதியாக தான் இருக்கோம். நற்பணி இயக்கத்தை மட்டும் தான் கொண்டு செல்கிறோம்.." என்று கூறினார்.
சீனிவாசன் தவெக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கையில், இதுபற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது. இது தெரிந்து இருந்தால் நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இருப்போம்" என்று கூறினார்.















Click it and Unblock the Notifications