தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா.. முதல்வர் விஜய் பதவி கொடுக்க இதுதான் காரணம்!
சென்னை: மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக இணக்கமான போக்கை விரும்புவதன் காரணமாகவே தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பதவிக்காக வைகோ காய் நகர்த்திய போதும், முதல்வர் விஜய் வெங்கட் நாராயணாவின் பெயரை டிக் அடித்ததன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
அண்மையில் தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டார். கர்நாடகாவுடன் மேகதாது அணை தொடர்பான பிரச்சனை அதிகரித்து வரும் சூழலில், பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான வெங்கட் நாராயணாவை நியமனம் செய்தது விவாதப் பொருளாக மாறியது.

தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்த போதே வெங்கட் நாராயணா உடனிருந்தார். அப்போதே வெங்கட் நாராயணாவை எதற்காக ஆளுநரை பார்க்க செல்லும் போது உடன் அழைத்து செல்ல வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. அதற்கான பதிலாக வெங்கட் நாராயணாவின் நியமனம் அமைந்திருக்கிறது.
இந்த பொறுப்புக்கு வருவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிரமாக காய் நகர்த்தி வந்தார். ராஜ்ய சபா எம்பி பதவி இல்லாத சூழலில், தன்னுடைய டெல்லி செல்வாக்கைக் காரணமாகக் காட்டி தவெகவிடம் இந்த பதவியை பெறலாம் என்று பேசப்பட்டு வந்தது. மதிமுக தரப்பில் கேட்கப்பட்ட போதும் கூட, முதல்வர் விஜய் அதனை கண்டுகொள்ளவில்லை.
அதற்கு தவெக தரப்பு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில் தவெகவின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் நிதி தேவை என்பதாலேயே, விஜய் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது திரை மறைவில் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கவே தவெக தலைமை விரும்புகிறது. அதன் மூலமாகவே காரியம் சாதிக்க முடியும் என்று நம்புகிறது.
ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை வந்த போது, வெங்கட் நாராயணா தரப்பு தங்களின் டெல்லி செல்வாக்கை, பாஜக தொடர்புகளையும் பயன்படுத்த ஆயத்தமானது. ஆனால் விஜய் தரப்பு நீதிமன்றம் மூலமாக செல்லலாம் என்று கூறியதால், வெங்கட் நாராயணா அமைதி காத்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க டெல்லி முட்டுக்கட்டை போட்ட போதும், வெங்கட் நாராயணா மூலமாகவே பேசி சுமூக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாகவே வெங்கட் நாராயணாவும் ஆளுநரை சந்திக்க சென்றிருக்கிறார். இதனால் முதல்வர் விஜய் வெங்கட் நாராயணா மீது அதிக நம்பிக்கையை கொண்டிருக்கிறார். அவருக்கு பொறுப்பு வழங்கினால் டெல்லி மற்றும் தமிழ்நாடு இடையிலான தொடர்புகளிலும், பேச்சுவார்த்தைகளிலும் எந்த பிரச்சனையும் இருக்காது என்பதால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications