அதிமுகவை தவெக சின்னாபின்னமாக்கி வருவதன் பின்னணி.. அப்பாவு வெளியிட்ட அதிரடி பதிவு
சென்னை: தேர்தல் முடிவுகள் வந்த நாள் இரவே அதிமுகவின் ஆதரவை த.வெ.க கோரியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சில நிபந்தனைகள் விதித்ததாகவும், அதனை ஏற்காத தவெக ஆத்திரத்தில் அதிமுகவை உடைத்து சின்னாபின்னமாக்கி வருவதாகவும் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பேசப்பட்டு வருகிறது என்று தமிழக முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட பதிவில் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திமுக தலைவர் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டு சிலர் விஷம பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம், த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு திமுக முட்டுக்கட்டை போடாது என்று சொன்ன வார்த்தையை திமுக தலைவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.

ஆனால் நடந்த உண்மை.. தேர்தல் முடிவுகள் வந்த நாள் இரவே அதிமுகவின் ஆதரவை த.வெ.க கோரியதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சில நிபந்தனைகள் விதித்ததாகவும் அதனை ஏற்காத தவெக ஆத்திரத்தில், அதிமுகவை உடைத்து சின்னாபின்னமாக்கி வருவதாகவும் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பேசப்பட்டு வருகிறது.
இந்த உண்மைகளை ஒட்டுமொத்தமாக மறைத்து விட்டு தமிழக முதல்வர் அவர்கள் அதிமுக எம்எல்ஏக்கள், கல்லாப் பெட்டி எம்.எல்.ஏக்கள், அமமுக எம்.எல்.ஏ, தற்போது ஆதரவு கொடுத்துவரும் கட்சி எம்.எல்.ஏக்கள், வைகோ அவர்களுடைய பத்திரிகை வாக்குமூலம் மற்றும் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய சொல்லி கட்சியில் சேர்த்து கொண்டிருப்பது வரை த.வெ.க குதிரை பேரங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இத்தொடர் குற்றங்களை விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, கரூரில் 41-பேர் இறந்ததற்கு சிபிஐ விசாரணை கேட்டதுபோல், இதற்கும் சிஎம்-சார் சிபிஐ விசாரணை கேட்பீர்களா ? அல்லது தமிழக காவல்துறையை ஏவி எதிர்கட்சிகளை மிரட்டுவீர்களா?" இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய் அவர்களுடைய அரசு என்பது 150, 160 தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்று அமைந்த ஆட்சி அல்ல இது ஒரு மைனாரிட்டி ஆட்சி. 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் அரசு தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பிறகு 107ஆக குறைந்து, பிறகு நீதிமன்றத்தினுடைய தடை உத்தரவால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் வாக்களிப்பதற்கு தடை விதித்த பின் 106 ஆக குறைந்தது. சபாநாயகருடைய ஒரு வாக்கை கழித்தால் 105 தான். வெறும் 105 இடங்களை வைத்துக்கொண்ட விஜய் அரசு மிக பலமான ஒரு அரசு போன்றும் இந்த அரசை சீர்குலைப்பதற்கு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் சதி செய்வதாக ஒரு நகைச்சுவையை அரங்கேற்றி வருகிறார்கள்.
விஜய் அரசாங்கம் என்றைக்கும் கவிழக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறது என்று ஒரு சாதாரண பாமர மக்களுக்கு கூட தமிழ்நாட்டில் இன்றைக்கு தெரியும். அரசியல் புரிதல் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும். அது ஒன்னும் ஒரு பெரிய எக்கு கோட்டையில் இருக்கக்கூடிய ஒரு கோபுரம் அல்ல. ஒரு சீட்டு கட்டு போலதான் விஜய் அரசு இன்றைக்கு இருக்கிறது. ஒரு காத்து அடித்தால் கூட சரிகின்ற நிலையில் தான் இருக்குதே தவிர வலுவான ஆட்சியோ அதிகாரமோ அவர்களுக்கு இல்லை. எனவே அதை மறந்து தினம் தினம் இவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications