4.80 லட்சம் டன் நிலக்கரி: மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வருகை.. மின் வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மலேசியா, இந்தோனேஷியாவிலிருந்து 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2.29 கோடி வீட்டு மின் இணைப்புகள், 34 லட்சம் வர்த்தக இணைப்புகள், தொழிற்சாலைகளுக்கு 7.5- லட்சம் குறைந்த அழுத்த மின் இணைப்புகள், 10 ஆயிரம் உயர் அழுத்த மின் இணைப்புகள் உள்ளன.

குளிர்காலத்தில் தினசரி மின் தேவை 9 ஆயிரம் மெகாவாட், கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் உள்ள நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதிலும் கடந்த 29ஆம் தேதி தினசரி மின் தேவை 17,370 மெகாவாட்டாக இருந்தது.
மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மின் வாரியம், தனது சொந்த உற்பத்தி நிலையங்களில் இருந்து தினமும் 3,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. எஞ்சிய மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்தும் , தனியார் மின் நிலையங்களில் இருந்தும் கொள்முதல் செய்கிறது. அனல் மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
ஆனால் ஒடிஸா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐபி வேலி ஆகிய இரு சுரங்கங்களில் இருந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி விநியோகம் செய்யப்படுகிறது. சுரங்கங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் பாரதீப் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, அங்கிருந்து கப்பல்கள் மூலம் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.
எனினும் பாரதீப் துறைமுகத்தில் தமிழகத்திற்கு நிலக்கரி ஏற்ற ஒரு தளம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் நிலக்கரி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2 மாதங்களுக்குத் தேவையான 5 லட்சம் டன் நிலக்கரி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
தற்போது 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. இந்த நிலக்கரி வரும் 15 ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு வரும். இதே போல் நடுத்தர கால அடிப்படையில் 650 மெகாவாட் மின்சாரமும் குறுகிய கால அடிப்படையில் 750 மெகா வாட் மின்சாரமும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications