ரயிலில் ரெய்டு! சென்னை - நெல்லைக்கு ரூ. 4 கோடி கொண்டு சென்ற 3 பேர்.. தேர்தல் பணம்? யார் அந்த புள்ளி?
சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் ரூபாய் 4 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான 3 பேர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளர் சதீஷ், அவரது சகோதர் நவீன், விடுதி லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் தான் ரூபாய் 4 கோடி பணத்துடன் பிடிபட்டுள்ளனர். கைதான நபர்கள் ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகரின் விடுதியில் பணியாற்றுபவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications