"ரவுடிகளின் மொழி" சென்னை காவல் ஆணையராக அருண்..பொறுப்பேற்ற 9 மாதங்களில் 4 என்கவுன்ட்டர்..முழு விவரம்
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற 9 மாதங்களில் 4 என்கவுன்ட்டர் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. இன்று சென்னை செயின் பறிப்பு சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், இதற்கு முன்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, ரவுடி சீசிங் ராஜா ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அருண், ரவுடிகளை ஒடுக்க அவர்களின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக கூறினார்.

இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற 9 மாதங்களில் இதுவரை 4 என்கவுன்ட்டர் சம்பவங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று 7 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. செயினை பறித்துவிட்டு விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற வடமாநில கும்பலை, போலீசார் விமான நிலையத்தில் தட்டி தூக்கினர்.
அதேபோல் ரயில் மூலமாக தப்பி முயன்ற கொள்ளையனையும் போலீசார் மடக்கினர். இந்த சம்பவத்திற்கு மூளையாக ஜாபர் என்பவர் செயல்பட்டது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நகைகளை மீட்பதற்காக ஜாபர் அழைக்கப்பட்டு சென்ற போது, அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றார்.
இதனால் திருவான்மியூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரி, ஜாபரை என்கவுன்ட்டர் செய்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்த திருவான்மியூர் ஆய்வாளர் முகமது புகாரியே, இந்த ஜாபர் குலாம் ஹுசைனையும் என்கவுன்ட்டர் செய்துள்ளார். சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் நடக்கும் 4வது என்கவுன்ட்டர் இதுவாகும்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, ரவுடி சீசிங் ராஜா ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். தற்போது 4வது முறையாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம் ஹுசைன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேள்விகள் எழுந்து வருகிறது.
நெல்லை காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாபர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஈரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ரவுடி கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்து வருவது தொடர்கதையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications