திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்களா?… டெல்லியில் பேச்சுவார்த்தை
டெல்லி: தேமுதிகவை தங்களது கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவை இணைக்க டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவாகியுள்ளது.
பாமக எந்த கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 1 ராஜ்ய சபா எம்.பி மற்றும் 7 இடங்களை ஒதுக்கிய அதிமுகவில் இணைந்தது. அதேபோல் தேமுதிகவும் எந்த கட்சியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை
முன்னதாக, பாமகவுக்கு அளித்தது போல் தங்களது கட்சிக்கும் சீட் ஒதுக்கினால் அதிமுகவில் இணைய தயார் என தேமுதிக தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க அதிமுக மறுக்கவே , கூட்டணி பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

நான்கு தொகுதிகள்
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக இரண்டு தொகுதிகளையும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளையும் ஒதுக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உடன் கே.எஸ். அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அரசியல் பேசப்பட்டது
அமெரிக்காவிலிருந்து சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அரசியலும் பேசப்பட்டதாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில் போட்டுடைத்தார்.

முதல்வர் அழைப்பு
இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என முதல்வர் பழனிசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதுவாயினும், அதிமுக - திமுக இரண்டு அணிகளிலும் எந்த அணி அதிக தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறதோ அந்த அணியில் தேமுதிக இடம்பெறப் போவதாக தகவல் கசிந்துள்ளது.












Click it and Unblock the Notifications