உதயநிதி ஸ்டாலின் பேச்சு..அரசியல் 'சடுகுடு' ஆடும் 'பாஜக' முதல்வர்கள்.. கூடவே கை கோர்த்த மமதா பானர்ஜி!
சென்னை: சனாதன ஒழிப்பு தொடர்பான தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு இந்தியா முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்: சனாதன தர்மம் என்பது பல்லாயிரம் ஆண்டுகாலமாக பல கோடி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உலகம் ஒரே குடும்பம் என்பதை வலியுறுத்துவதுதான் சனாதன தர்மம். ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்கிறது சனாதனம். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஏன் மாறுபாடான குரலில் பேசுகின்றனர்? மும்பையில் நீங்கள் கூடியது சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டத்தானா? உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ம.பி. காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய்சிங் என்ன பதில் சொல்வார்கள்? சனாதன தர்மத்தை ஒழிப்போம் என எத்தனையோ பேர் வந்தார்கள்.. ஆனால் சனாதன தர்மத்தை ஒருவராலும் ஒழிக்கவே முடியாது. சனாதன தர்மம் எப்போதும் உயிர்ப்புடனேயே இருக்கும்.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே: சனாதனத்துக்கு எதிராக பேசுகிற இவர்களுக்குதான் உத்தவ் தாக்கரே விருந்து கொடுத்தார். உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே கடும் கன்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லை எனில் சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு தருவதாகத்தான் அர்த்தம். பால் தாக்கரே இருந்திருந்தால் தன்னுடைய வேதனையை கொட்டி இருப்பார். கண்டனத்தை தெரிவித்திருப்பார். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து, மிக கேவலமானது. இந்துயிசம், சனாதனத்துக்கு எதிரான சதியின் சூத்திரதாரி காங்கிரஸ்தான். இதற்கான தண்டனையை காங்கிரஸ் நிச்சயம் அனுபவிக்கும். உதயநிதி ஸ்டாலின் கருத்தை யார் ஆதரிக்கிறார்கள்? காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன், கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே. காங்கிரஸ் கட்சி கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறதே.. இந்த நாட்டில் முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என நான் பேசுகிறேன்... என்னுடைய கருத்து சுதந்திரம் என காங்கிரஸ் சொல்லுமா? அல்லது கிறிஸ்தவத்தை ஒழிப்போம் என பேசினால் அதை கருத்து சுதந்திரம் என சொல்லுமா காங்கிரஸ்? ஆனால் நாங்கள் முஸ்லிம்களை ஒழிப்போம்; கிறிஸ்தவத்தை அழிப்போம் என்றெல்லாம் பேசமாட்டோம்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி: எனக்கு சனாதன தர்மம் மீது மரியாதை உள்ளது. சனாதன தர்மம்தான் ரிக், யஜூர் வேதங்களை உருவாக்கியது. இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையை கொண்டது. எந்த ஒரு மதத்தினரது உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது.












Click it and Unblock the Notifications