திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா.. அவசர அவசரமாக சீலிடப்பட்ட "அந்த" தெரு
சென்னை: சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தமாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,082 பேராக உள்ளது. வடசென்னையில்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவல்லிக்கேணியில் இரு தெருக்களில் 3 மற்றும் 7 சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா உறுதியானது.
இந்த நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள விஆர் பிள்ளை தெருவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.