ஒடிஷா விபத்தை போல 42 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் மோதிய 3 ரயில்கள்-உயிர் தப்பிய எம்.ஜி.ஆர்!
சென்னை: ஒடிஷாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 294 பேர் உயிரிழந்துள்ளனர்; 900 பேர் படுகாயமடைந்துள்ளனர். 42 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இதேபோல 3 ரயில்கள் மோதிய ஒரு விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்தில் 19 பேர் பலியாகினர்.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒடிஷாவின் பாலசோர் அருகே மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர்; 900 பேர் படுகாயமடைந்துள்ளனர். உலகையே இந்த கோர விபத்து உலுக்கி எடுத்துள்ளது.

இதே போன்ற 3 ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் 42 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது. அப்படியான ஒரு கோர விபத்து தமிழ்நாட்டின் வாணியம்பாடியில் 1981-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி நிகழ்ந்தது.
அதாவது
முதலில் சரக்கு ரயில் ஒன்றின் பெட்டிகள் கழன்று விபத்துக்குள்ளானது
அடுத்ததாக திருவனந்தபுரம் மெயில் அந்த சரக்கு ரயில் மீது மோதியதில் பயணிகள் பயணித்த பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன
திருவனந்தபுரம் மெயில் மீது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
ஒடிஷாவின் பாலசோர அருகே எப்படி சரக்கு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக் கொண்டனவோ அதேபோலதான் 42 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் வாணியம்பாடியில் கோர ரயில் விபத்து நிகழ்ந்தது. தூக்கி வீசப்பட்ட ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை பாதுகாப்பாக மீட்க வெல்டிங் இயந்திரம் பயன்படுத்தப்பட்ட போது சில பெட்டிகள் தீபிடிக்கவும் செய்தன.
வாணியம்பாடி விபத்தில் சிக்கிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், இடதுசாரித் தலைவர்களான மறைந்த கல்யாண சுந்தரம், மாணிக்கம் ஆகியோர் பயணித்தனர். இருவரும் நல்வாய்ப்பாக அன்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்தில் மொத்தம் 19 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து உறுதி செய்யப்படாத ஒரு தகவலும் உண்டு. கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க விபத்துக்குள்ளான ரயில் ஒன்றில் பயணம் செய்ய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். கடைசிநேரத்தில் எம்.ஜி.ஆரின் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது என்பதுதான் அத்தகவல். ஆனால் இதனை உறுதி செய்ய முடியவில்லை.












Click it and Unblock the Notifications