584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை.. முதல்வர் பழனிசாமி வழங்கினார்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், 584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து வருவதாக, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணிநியமன ஆணைகளை வழங்கிய பின் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை பெற ரூ.5,304 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதே போல், 584 மருத்துவர்கள் பணி நியமனத்தின் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடமே இல்லாத நிலை ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், 8 ஆயிரம் பேருக்கான பணி நியமன ஆணை இந்தாண்டுக்குள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
உயர்வகுப்பில் பொருளாதார நிலையில், 10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்று அதற்கு பின்னரே அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்தவமனைகளில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 20 சதவீத மகப்பேறு, வீட்டில் நடப்பதாக நிதி ஆயோக்கில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தவறானது. 99 சதவீத மகப்பேறு மருத்துவமனையில் தான் நடக்கிறது எனவும் அவர் விளக்கமளித்தார்.