தமிழகத்தில் 5ஆம் கட்ட தடுப்பூசி மெகா முகாம் தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படுகின்றன. 5ஆம் கட்டமாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. தற்போது காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கியது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம்கள் ஞாயிறுக்கிழமை தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தடுப்பூசி ஒன்றால் மட்டுமே இந்த கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என்பதால் தமிழக அரசு மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுக்கிழமை இந்த முகாம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நடத்தப்படுகிறது. இன்று நடத்தப்படுவது 5ஆம் கட்டமாக நடத்தப்படுவதாகும். தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். முதல் தவணையில் விவரங்கள் அடிப்படையில் அவர்களை செல்போனில் தொடர் கொண்டு அவர்களின் அச்சம், தயக்கத்தை போக்கி அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. இந்த முகாம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் 5 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. வீட்டின் அருகில் இருக்கும் முகாம்களுக்கு பொதுமக்கள் வந்து எந்த தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றார். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாமில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications