இன்று முதல் ஜி.கே.வாசன் எம்பி.. ராஜ்யசபாவுக்கு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு
சென்னை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்பாளர்களாக போட்டியிட்ட 6 பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, விஜிலா சத்தியானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, டிகே ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய வரும் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
திமுக சார்பில் திருச்சி சிவா, என் ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அது போல் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே பி முனுசாமிக்கும், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த தமாகாவின் தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தமிழக சட்டசபை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்துள்ளார். அதிமுகவுக்கு 3 மாநிலங்களவை சீட்டுகள் என்றதும் ஒரு சீட்டுக்காக தேமுதிக முட்டி மோதி பார்த்தது.
1.8 லட்சம் பயணிகளுக்கு கொரோனா சோதனை.. சிறப்பு கிளீனிக்.. 4 மையங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் செம!
இதற்காக முதல்வர், துணை முதல்வர் என பெரும்பாலானோரிடம் சுதீஷ் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் கூட்டணி ஒப்பந்தத்தின் போது அவர்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி கொடுப்பதாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என அதிமுக வெளிப்படையாக கூறியது.
எனினும் விடாமல் தேமுதிக போராடியது. ஆயினும் ஒரு எம்பி பதவியை கூட்டணி கட்சியான ஜிகே வாசனுக்கு அதிமுக அளித்தது. இது தேமுதிகவை அதிர்ச்சி அடைய வைத்தது. நாங்கள் என்ன தமாகாவைவிட எந்தவிதத்தில் குறைந்துவிட்டோம் என தேமுதிக தலைமை நிர்வாகிகள் கடுங்கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஜிகே வாசன் தற்போது நீண்ட காலத்திற்கு பிறகு நாடாளுமன்றத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.