‘வெர்ஷன் 4’ ஆபரேஷனில் இறங்கிய தமிழ்நாடு போலீஸ்! 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது: டிஜிபி தகவல்
சென்னை : தமிழ்நாடு காவல்துறை நடத்திய 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை' வெர்ஷன் 4 மூலம் கடந்த 6 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 6.12.2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை போலீசார் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரத்து 721 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்து 723 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழியவில்லை. இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்து, கஞ்சா வியாபாரிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
'ஆபரேஷன் கஞ்சா' வேட்டை குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அந்த ஆணையின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் 'கஞ்சா வேட்டை' 1:0, 2:0, 3:0 நடந்து முடிந்தன. மீண்டும் கஞ்சா விற்பனை தலை தூக்கவிடாமல் தடுக்க 'கஞ்சா வேட்டை 4.0' அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் 1.5.2023 முதல் நடைபெற்று வருகிறது.

ஆறு நாட்களில் தமிழகம் முழுவதும் 659 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பெண்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 41 வங்கி கணக்குகள் முடுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகள் தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள், அவற்றை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க பண வெகுமதியும் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications