7வது ஊதியக்குழு ரெடி.. கடைசி அகவிலைப்படி எவ்வளவு? தீபாவளிக்கு முன்பாகவே வரும் அறிவிப்பு
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அடுத்த மாதம் அகவிலைப்படி (DA) 55% இலிருந்து 58% ஆக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இந்த 3% உயர்வு, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பெரும் நிம்மதியை அளிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு, பண்டிகைக் காலத்தில் நிதிச்சுமையைக் குறைத்து, வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி அறிவிப்பு
மத்திய அரசு அகவிலப்படியை ஆண்டுக்கு இருமுறை திருத்துகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கும் என இது கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம், ஜனவரி-ஜூன் சுழற்சிக்காக அகவிலப்படி 53% இலிருந்து 55% ஆக 2% உயர்த்தப்பட்டது.
தற்போது, ஜூலை-டிசம்பர் காலத்திற்கான 3% அகவிலப்படி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால், நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு
இந்த 3% அகவிலப்படி உயர்வு ஊழியர்களுக்கு எப்படிப் பிரதிபலிக்கும் என்பதைப் பார்ப்போம். உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ₹9,000 ஆக இருந்தால், தற்போது 55% அகவிலப்படி அடிப்படையில் ₹4,950 கிடைக்கிறது. மொத்தமாக ₹13,950 பெறுகிறார். DA 58% ஆக உயர்ந்தால், அவர் ₹5,220 பெறுவார். இதன் மூலம் மொத்தமாக ₹14,220 கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு ₹270 கூடுதலாகப் பெறுவார்.
அதேபோல, ₹18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஒரு ஊழியருக்கு, தற்போது 55% DA உடன் ₹9,900 கிடைக்கிறது. மொத்தமாக ₹27,900 ஆகிறது. DA 58% ஆக உயரும்போது, ₹10,440 ஆக அதிகரித்து, மொத்த ஊதியம் ₹28,440 ஆக உயரும். இதன் மூலம் மாதத்திற்கு ₹540 கூடுதலாகக் கிடைக்கும்.
இந்த அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக் குழுவின் கீழ் நடைபெறும் கடைசி உயர்வு என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. 7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 8வது ஊதியக் குழு செயல்முறையை அரசு எவ்வாறு விரைவுபடுத்துகிறது என்பதில் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது.
அகவிலைப்படி உயர்வு - கணக்கீடு
இந்த உயர்வு சிறியதாகத் தோன்றினாலும், பண்டிகைக் காலத்தில் ஒவ்வொரு கூடுதல் ரூபாயும் முக்கியமானது. செலவுகளைச் சமாளிப்பதற்கும், சிறிய கொண்டாட்டங்களுக்கும் இது உதவியாக இருக்கும். அகவிலைப்படி என்பது தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அகவிலப்படி சரிசெய்யப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் வாங்கும் திறன் பாதுகாக்கப்படும். இந்த உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும், கடந்த ஆண்டுகளின் போக்குகளின்படி, நவராத்திரிக்குப் பிறகும் தீபாவளிக்கு முன்பும் இத்தகைய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications