நோட்டாவுக்கு ஓட்டுப் போட்ட நீலகிரி அஜ்ஜூர் கிராமம்.. யாரும் வேண்டாம் என முடிவெடுத்த 800 வாக்காளர்கள்
சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அஜ்ஜூர் கிராம மக்கள், வனத்துறையின் வெளியேற்ற நடவடிக்கையைக் கண்டித்து நேற்று நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 'நோட்டா'வுக்கு வாக்களித்துள்ளனர். சுமார் 800 வாக்காளர்களைக் கொண்ட இந்தச் சிறிய கிராமத்தின் முடிவு, தொகுதியின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. என்ன பிரச்சனை அக்கிராம மக்களுக்கு?
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள அஜ்ஜூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள், வனத்துறையின் வெளியேற்ற நடவடிக்கையைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களின் வாக்குகளை 'நோட்டா'வுக்கு செலுத்தப் போவதாக அதிரடியாக அறிவித்தனர்.

அஜ்ஜூர் 800 வாக்குகள்
அஜ்ஜூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களை வனத்துறை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.. கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், இந்தப் பகுதியில் உள்ள நிலங்களின் வகைப்பாட்டை முறையாக ஆய்வு செய்து, குடியிருப்பு நிலங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இந்த உத்தரவைச் செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருவதாக மக்கள் சொல்கிறார்கள்.
சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஆவணங்களில், சர்வே எண்கள் 364/1 மற்றும் 412 ஆகியவை கிராம நத்தம் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.
இருந்தாலும், வனத்துறை இவற்றை காப்புக்காடுகள் (Reserved Forest) எனக் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியதுதான் தற்போதைய உடனடி கொந்தளிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வளைத்து வளைத்து நோட்டா
மற்றொருபுறம், வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சட்ட விதிகளைப் பின்பற்றுவதாகத் தெரிவிக்கின்றனர். "உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வனப்பகுதியாகக் கருதப்படும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எங்களின் கடமை.
இது யானைகள் நடமாடும் முக்கியமான வழித்தடத்தை ஒட்டிய பகுதி என்பதால், வனப் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதியே வெளியேற்ற நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. உரிய நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என்பது வனத்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கமாக உள்ளது.
இதில், அஜ்ஜூர் என்ற கிராமத்தில் மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஒரு சிறிய இடைத்தேர்தலில் இந்த 800 வாக்குகள் என்பது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக அமையக்கூடும்.
பதாகை ஏந்தி போராட்டம்
"நாங்கள் பலமுறை ஆட்சியரிடமும் அமைச்சர்களிடமும் மனு அளித்துவிட்டோம். எங்களின் பட்டா நிலங்களையே வனத்துறை பறிக்கப் பார்க்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்காதபோது, எந்தக் கட்சிக்கு வாக்களித்தும் பயமில்லை. எனவே, எங்களின் எதிர்ப்பைக் காட்ட இந்த முறை நோட்டா பொத்தானை மட்டுமே அழுத்துவோம் என்று அஜ்ஜூர் கிராம நலச்சங்கத் தலைவர் மாதவன் ஆவேசமாகத் தெரிவித்தார்.
கிராமத்தின் நுழைவாயிலில் "வனத்துறையின் அராஜகத்தைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கிறோம்" என்ற பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
"எங்கள் நிலத்திற்கு நிரந்தரப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, எங்கள் விரல்களில் மை படாது; அப்படியே பட்டாலும் அது 'நோட்டா'வுக்கே" என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர்.
எகிறும் எதிர்பார்ப்பு
இப்போது இந்த விவகாரம் தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் நோட்டாவைத் தேர்வு செய்துள்ளதால், அது ஜனநாயக ரீதியாகப் பெரிய செய்தியைச் சொல்லும். அதிகாரிகளின் பிடிவாதமும், மக்களின் வாழ்வாதாரப் போராட்டமும் சந்திக்கும் இந்த முனையில், அரசு உரிய தலையீடு செய்து நில அளவை நடத்தித் தீர்வு காண வேண்டும் என்பதே இப்போதைய ஒரே கோரிக்கையாக உள்ளது.
வரும் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, இந்த 'நோட்டா' வாக்குகள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது தெரியவரும்....!!!














Click it and Unblock the Notifications