அடுத்த சிக்கல்.. ஜெயக்குமாருக்கு எதிராக திரண்ட 83 குடும்பங்கள்.. போலீஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பு
சென்னை: திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் திமுக பிரமுகர் ஒருவரை அரை நிர்வாணமாக்கித் தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக ஜெயக்குமார் மீது நேற்றைய தினம் மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டது.

குடிசை மாற்று வாரியம்
இந்தச் சூழ்நிலையில், ஜெயக்குமார் புகார் அளிக்க ஒரே நேரத்தில் 83 குடும்பங்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. அங்கு இருந்தவர்களுக்கு அதற்குப் பதிலாக திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகில் கட்டப்பட்ட 12 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.

கோரிக்கை
அப்போது அங்கிருந்த மக்கள் தங்களுக்குக் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகள் பாதுகாப்பு தன்மை அற்று இருப்பதாகவும் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்து பின்னர் தங்களுக்கு வீடுகளை ஒதுக்குமாறும் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட கொரோனா நோயாளிகள் புதிதாகக் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜெயக்குமார் ஆதரவாளர்கள்
அங்குள்ள குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாத நிலையில் அங்கு உள்ள குடியிருப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்து விட்டதாகவும் இதனால் 83 குடும்பங்களும் வீடுகள் இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பாகக் குடிசை மாற்று வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று வேதனையுடன் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

புகார்
இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அபகரித்த 83 வீடுகளையும் மீட்டு, தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே நேரத்தில் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திருவொற்றியூர் காவல் நிலைய உதவி ஆணையாளர் பொதுமக்களின் புகார் மனுக்களை வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட பொதுமக்கள், இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சரிடமும் காவல்துறை ஆணையரிடமும் புகார்கள் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications