94 வயது காமாட்சி பாட்டியின் கவுன்சிலர் கனவு தகர்ந்தது! ஓய்வு கொடுத்த 174-வது வார்டு மக்கள்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் 174-வது வார்டில் சுயேச்சையாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட 94-வயதான காமாட்சி என்ற மூதாட்டி 460 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
அடையாறு பகுதியில் வரும் 174-வது வார்டில் காமாட்சி பாட்டி என்றால் எல்லோருக்கும் தெரியும் என்ற நிலையிலும் அவருக்கு வாக்களிக்க பெரும்பாலானோர் முன்வரவில்லை.
இதற்கு காரணம் வயது மூப்பு காரணமாக காமாட்சி பாட்டி நேரடி பிரச்சாரத்தை தவிர்த்து சமூக வலைதளங்கள் மூலம் மட்டுமே பரப்புரை மேற்கொண்டதாகும்.

சுடச்சுட முடிவுகள்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சுடச்சுட வெளியாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பல திடீர் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் சென்னை அடையாறு பகுதியை உள்ளடக்கிய 174-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட காமாட்சி பாட்டி வெறும் 460 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இந்த வயதில் இவர் தேர்தலில் போட்டியிடுகிறாரே என தேர்தலுக்கு முன்னர் காமாட்சி பாட்டியை ஆஹா ஓஹோவென பாராட்டி பெருமைப் பேசிய அடையாறு பகுதி மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கின்றனர்.

தன்னம்பிக்கை
சென்னை மாநகராட்சி தேர்தலில் எப்படியும் கவுன்சிலர் ஆகிவிடுவேன் என்றும் தன்னை பற்றி தனது பகுதி மக்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்கள் தன்னை கைவிடமாட்டார்கள் எனவும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உலா வந்தார் காமாட்சி பாட்டி. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப அதிர்ச்சி தோல்வியை தழுவியிருக்கிறார் காமாட்சி. கடந்த 2015 சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் தனக்கு தோன்றியதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் பூர்விகம்
தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட காமாட்சி பாட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் வசித்துவந்த 1978-ம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்திருக்கிறார். அப்போது முதல் சமூக செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது ஏதேனும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறார். இவருக்கு உதவியாக இவரது பெயரன் மற்றும் பெயர்த்திகள் இருந்து வந்திருக்கின்றனர். இப்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கூட அவர்கள் தான் தங்கள் பாட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.

வெற்றி பெற்றிருந்தால்
காமாட்சி பாட்டி ஒரு வேளை தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலர் ஆகியிருந்தால் தமிழகத்திலேயே அதிக வயதில் கவுன்சிலர் ஆன பெருமையை அவர் அடைந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கவுன்சிலர் ஆகாவிட்டாலும் கூட எப்போதும் போல் தனது சமூக செயற்பாடுகளை அவர் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications