அந்த கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்.. இந்த கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது.. கொரோனா பரிதாபங்கள்
சென்னை: சமூக ஒன்று கூடல் என்பதை தவிர்க்கும் விதமாக ஒரு வங்கியில் கவுன்ட்டர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே கயிறு மூலம் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உலுக்கி வருகிறது. உயிர் கொல்லி வைரஸான இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது. இந்தியாவில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் பலியாகிவிட்டனர்.
ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி
என்ன அறிவுரைகள்
கொரோனாவைத் தடுக்க அரசு கூறும் அறிவுரைகள் என்னவென பார்ப்போம். காய்ச்சல், சளி, தொண்டை வலி ஆகியவை இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும். அது போல் யாராவது வெளிநாடுகளிலிருந்தோ கொரோனா பாதித்த மாநிலங்களிலிருந்தோ வந்தால் இந்த அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி ரத்து
அது போல் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளியிலாவது நின்று பேச வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொடக் கூடாது. பயன்படுத்தக் கூடாது. அது போல் சமூக ஒன்று கூடல்களை தவிர்க்க வேண்டும். அதாவது திருமணம், பொதுக் கூட்டம், இதர நிகழ்ச்சிகளுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். தற்போது மண்டபங்களுக்கும் எந்த வித நிகழ்ச்சியையும் புக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி
பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன. எனினும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் புழங்கும் ஆர்டிஓ, வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலகங்களில் பொது மக்கள் வருகை குறைந்துள்ளது. அது போல் பொதுமக்கள் வந்து செல்லும் வங்கிகளிலும் கூட்டம் குறைந்துள்ளது.
மாற்றுக் கருத்து
புதிய நபர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பேச வேண்டும் என்பதால் கார்ப்பரேஷன் வங்கி ஒன்றில் கவுன்ட்டர்களுக்கும் வாடிக்கையாளர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளியில் கயிறு மூலம் கட்டியுள்ளனர். இதை பார்க்கும் போது வடிவேல் ஒரு படத்தில் "டேய் அந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், இந்தக் கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது. பேச்சு பேச்சா இருக்கனும்" என்பார். அதுபோல் இருக்கிறது. எனினும் இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.