பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்த ஒரே நாளில்.. வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை.. அதிமுக ஷாக்!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சி அமையும், ஆட்சியில் பாஜகவும் பங்குபெறும் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையிக்கு நேற்று வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்கண்டிகை நீர்தேக்கத்தை திறந்து வைத்ததுடன், மெட்ரோ ரயில் திட்டம், கரூர் பகுதியில் கதவணை திட்டம், கோவை அவினாசி உயர்மட்ட சாலை உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமித்ஷா உறுதி
கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், வரும் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாறைபோன்ற அதிமுக ஆட்சிக்கு பாஜக பக்கபலமாக இருக்கும் என்றார்.
ஆட்சியில் பங்கு
இந்நிலையில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். மேலும் ஆட்சியில் பாஜக பங்குபெறும், அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார். நேற்று கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆட்சியில் பாஜக பங்கு கேட்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக சம்மதிக்குமா
ஏற்கனவே பாஜக, அதிமுகவிடம் 60 சீட் வரை கேட்டு வருகிறது. எத்தனை சீட் ஒதுக்கும் என்பது இதுவரை தெரியவில்லை. பாஜக 60 சீட் கேட்டால் பாமகவும் அதிக இடங்களை கேட்கும். இதேபோல் தேமுதிகவும் அதிகஇடங்களை தருமாறு வற்புறுத்தும். எனவே இதனை ஏற்று அதிக இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒபிஎஸ் இபிஎஸ் விட்டுக்கொடுப்பார்களா? அல்லது குறைவான இடங்களை மட்டும் கொடுத்து கூட்டணி ஆட்சி இல்லை என்று அறிவிப்பார்களா என்பது தெரியவில்லை.
விட்டுக்கொடுப்பார்களா?
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அக்கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் பெரும் எதர்பார்ப்பு நிலவுகிறது. பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஆட்சியமைக்க இந்த முறை நல்ல வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கொண்டிருக்கின்றன. அதற்கு அதிமுக பச்சை கொடி காட்டுமா அல்லது வாய்ப்பே இல்லை என மறுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.