Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிக் கல்வியில் ஆர்எஸ்எஸ்சின் அஜென்டாவா? திமுக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம்- பரபர பின்னணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக்குள்ளான புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்கின்றன எதிர்ப்புக் குரல்கள். மேலும் ஆர்.எஸ்.எஸ்'ன் துணை அமைப்பான வித்யா பாரதி அமைப்பு, பண்பாட்டு வகுப்புகள் எடுக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதும் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

Recommended Video

    இல்லம் தேடி கல்வி திட்டம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியஇடம் இதுதான் - அன்பில் மகேஷ் பரபர பேட்டி

    பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் 1 முதல் 1.30 மணிநேரம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தக் கூடிய திட்டம்தான் இல்லம் தேடி கல்வித் திட்டம். இது மாநில அரசின் 100% நிதிப் பங்களிப்புடன் ரூ200 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் 6 மாதங்களுக்கு நாள்தோறும் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் இடம், மதச் சார்பற்றதாகவும் பாகுபாடு அற்றதாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்காணம் அருகே இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் இல்லம் தேடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    ஆசிரியர்களிடம் அச்சம்

    ஆசிரியர்களிடம் அச்சம்

    இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்களுக்கான் விண்ணப்பங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இந்த தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ1,000 வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. இத்திட்டம் தொடர்பாக கிராமப்புற ஆசிரியர்களிடம் நாம் பேசிய போது, ஏற்கனவே இதேபோல் தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் தூய்மை பணியாளர்கள் என தனியே பள்ளிகளில் நியமித்தோம். ஆனால் அவர்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் சொந்த பணத்தில் சம்பளம் கொடுத்தோம். இப்போது அந்த தூய்மை பணியாளர்கள் பணிக்கே வருவதும் இல்லை. அதேபோல் இப்போது ரூ1,000 உதவித் தொகை, ரூ200 கோடி நிதி ஒதுக்கீடு என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படி தன்னார்வலர்களை கல்விப் பணியில் திணிப்பதன் மூலம் ஆசிரியர்களிடையே தங்களது பணிக்கான உத்தரவாதம் அல்லது பணியின் எதிர்காலம் குறித்த ஒருவித அச்சம் உருவாகி உள்ளது. இது தொடர்பான ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு கல்வித்துறை தெளிவான விளக்கம் தர வேண்டும் என்கின்றனர்.

    கல்வி மீது வெறுப்பு உருவாகும்?

    கல்வி மீது வெறுப்பு உருவாகும்?

    மேலும் மாணவர்கள் மாலை 7 மணி வரை படித்தாக வேண்டும் அல்லது கற்றல் செயல்பாடுகளில் இருந்தாக வேண்டும் என்பது அவர்களுக்கு கல்வி மீது வெறுப்பைத்தான் உருவாக்குமே தவிர... ஆர்வத்தை வரவழைக்காது என்பதை ஏன் அரசு தரப்பு புரிந்து கொள்ளவில்லை என்கின்றனர் அந்த ஆசிரியர்கள். அத்துடன் தன்னார்வலர்களாக வருகிறவர்கள் ஏதோ ஒரு தத்துவார்த்தம் சார்ந்த கோட்பாட்டுடன் இருப்பவராக இருந்தால் மாணவர்களிடம் தேவையற்ற ஒரு கருத்து திணிப்புக்காக வாய்ப்பை அரசாங்கமே ஏற்படுத்தித் தரலாமா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதேபோன்ற ஒரு கருத்தைத்தான் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும் முன்வைக்கிறார்.

    கி.வீரமணி எதிர்ப்பு

    கி.வீரமணி எதிர்ப்பு

    இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே அறிவித்துள்ளது. இந்த நிலையில், நமது பள்ளிக் கல்வித் துறை அதனை தெரிந்தோ, தெரியாமலோ 'பழைய கள் புதிய மொந்தை' என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது அறிய முற்போக்குச் சிந்தனையும், மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாய் உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது என்றார். கி.வீரமணி சுட்டிக்காட்டியிருப்பது போல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையும் தன்னார்வலர்களை பயன்படுத்தச் சொல்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் தமிழக அரசோ, புதிய கல்விக் கொள்கை என்பதை சொல்லாமல் கொரோனா பெருந்தொற்று காலத்தை முன்வைத்து மாணவர்களுக்கு கற்றல் மேம்பாடு வழங்குகிறோம் என்கிறது. இந்த நேரத்தில் கி.வீரமணியின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இன்று வெளியிட்டுள்ளது.

    தன்னார்வலர்களை கேட்கும் ஆர்.எஸ்.எஸ்.

    தன்னார்வலர்களை கேட்கும் ஆர்.எஸ்.எஸ்.

    அதாவது, "கல்வித்துறையில் சேவைபுரியும் ஆர்.எஸ்.எஸ்'ன் துணை அமைப்பான வித்யா பாரதி அமைப்பின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, பாரதிய பண்பாட்டு வகுப்பு என்பது பள்ளியிலும் பொது தளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பாரதிய பண்பாட்டு வகுப்பில், வளரும் நமது குழந்தைகளுக்குத் தேவையான ஹிந்து சமய கதைகள், ஆன்மிக பெரியோர் வரலாறு, ஹிந்து வாழ்வியல் நெறிமுறை, பாரத நாட்டின் வீர வரலாறு, பண்புக் கதைகள் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வகுப்பை தங்கள் பகுதியில் நடத்த ஆர்வம் உள்ள உள்ள கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக சேவை எண்ணம் கொண்ட தன்னார்வலர்கள் வித்யாபாரதி, பாரதிய சம்ஸ்கார் கேந்திரம், தென் தமிழகம், 94896 90577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கூகுள் பார்மிலும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம் என இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    விளக்க வேண்டியது தமிழக அரசு

    விளக்க வேண்டியது தமிழக அரசு

    தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கும் நாளில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பும் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. இத்தனை சந்தேகங்கள், குழப்பங்கள், அச்சங்களை தீர்க்க வேண்டியது தமிழக அரசின் முதன்மையான கடமை என்கின்றனர் கல்வியாளர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+