தங்க நகை கடன் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை.. அதிலும் வந்த பெரிய கட்டுப்பாடு.. பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை: தங்க நகை கடன் ஒன்று தான் சாமானியர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. அதில் தற்போது வந்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏனெனில் பொதுமக்கள் தங்களுடைய நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து தான் கடன் பெற்று வருகிறார்கள். ஆனால் தங்கம் விலை சரித்திரத்தில் இல்லாத அளவாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அப்படி தாண்டியும் கடன் வழங்கும் அளவை குறைக்க போவதாக வரும் அறிவிப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
தங்கம் விலை தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதேநேரம் இடையில் சற்று குறைந்து காணப்பட்டது. அதாவது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இப்போது தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இனி கிராம் 10000க்கு கீழ் வருவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. தங்கத்தின் விலையுன் சமானியர்களின் சம்பள உயர்வை ஒப்பிட்டால் யாருக்கும் இவ்வளவு வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் வந்திருக்காது.

தங்கத்தின் வளர்ச்சி
அதேபோல் தான் தங்கத்துடன் எந்த துறையை ஒப்பிட்டாலும் இவ்வளவு பெரிய வளர்ச்சி ரியல் எஸ்டேட், பங்கு சந்தை என எதிலும் வந்திருக்காது. அந்த அளவிற்கு தங்கம் மிகப்பெரிய உயர்வை கண்டுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் 125 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. வெறும் ஒரு ஆண்டிலேயே 75 சதவீதம் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.
மக்கள் தப்பித்தார்கள்
இதனால் அடகு வைத்து திருப்ப முடியாமல் தவித்த மக்களுக்கு மேலும் கடன் வழங்கி அவர்களை வங்கிகள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளன. தங்கத்தின் மதிப்பு ஏறியதால் தொழில் தொடங்க, கல்வி கட்டணம் செலுத்த, வீடு கட்ட, இடம் வாங்க,மருத்துவ அவசரம் என பல்வேறு சூழல்களை மக்கள் தங்கத்தை வைத்து தான் தற்போது சரி செய்கிறார்கள். முன்பை விட அதிக பணம் கிடைப்பதால் மக்கள் ஓரளவு வறுமையை வென்று முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.
நகையின் மதிப்பு உயர்வு
வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் நகையின் மதிப்பு ஏறியதால், கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீதம் அளவிலான நகைக்கடனை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
நகையை திருப்ப ஆர்வம் இல்லை
அதேநேரம் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்போது, வாங்கிய கடன் தொகையானது அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பை விடவும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நகை கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவது இல்லை ( அப்படியான சூழல் இப்போதைக்கு வரவில்லை). முன்பு தங்கம் விலை குறைந்த போது, நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடும் போக்கு இருந்தது.
ரிசர்வ் வங்கி கவலை
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருந்தது. நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இதன்படி
நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்பட்டது. இந்த சூழலில் தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
65 சதவீதம் குறைவு
நகையின் மதிப்பில் 60 முதல் 65 சதவீதம் தான் கிடைக்கும் என்றால் அவசர தேவைக்கு கடன் வாங்குவோர் அவதிப்படும் நிலை ஏற்படும். நகையின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மேலும் உயர்ந்து 1.25 லட்சம் வரை கூட போகும் அபாயம் உள்ளது. இப்படியான நிலையில் கடன் தேவை உள்ள மக்களுக்கு வங்கிகளின் முடிவு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நகைக்கடனை அடைக்க இஎம்ஐ முறையை மக்களுக்கு வழங்கினால் எளிதாக நகையை அடைப்பார்கள் என்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications