ரிசர்வ் வங்கி ரத்து செய்த பின்னர்.. பேஎடிம் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: பேடிஎம் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனால் நாம் பயன்படுத்தும் பேடிஎம் ஆப் மற்றும் யுபிஐ சேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, அவை தொடர்ந்து செயல்படும் என்று நிறுவனம் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கும், வணிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பேடிஎம் (ஒன் 97 கம்யூனிகேசன் லிமிடெட்) நிறுவனத்தின் கம்பெனி செக்ரட்டரி சுனில் குமார் பன்சால்பங்குச் சந்தைகளுக்கு (BSE & NSE) அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறுகையில், பேடிஎம் நிறுவனத்தின் இணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் வங்கி உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 24, 2026 முதல் ரத்து செய்துள்ளது,

பயனாளர்களுக்குப் பாதிப்பு உண்டா?
பேடிஎம் ஆப் வேலை செய்யும்: பேடிஎம் செயலி, பேடிஎம் யுபிஐ, ரீசார்ஜ், பில் பேமெண்ட் போன்ற சேவைகள் வழக்கம் போல் எந்தத் தடையும் இன்றிச் செயல்படும்.
மற்ற சேவைகள்: பேடிஎம் கியூஆர், சவுண்ட்பாக்ஸ் , கார்டு மெஷின்கள் மற்றும் பேமெண்ட் கேட்வே போன்ற சேவைகளும் தடையின்றி இயங்கும். ஏனெனில் இவை மற்ற வங்கிகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
நிறுவனத்தின் விளக்கம்: பேடிஎம் நிறுவனம் ஏற்கனவே பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் வங்கியுடனான தனது வணிகத் தொடர்புகளைத் துண்டித்துவிட்டது. இந்த உரிமம் ரத்து நடவடிக்கையினால் பேடிஎம் நிறுவனத்திற்குப் நிதி ரீதியாகப் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் வங்கி தடை செய்யப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்
தொடர் விதிமீறல்கள் : கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டிய குறைபாடுகளைச் சரிசெய்ய பேடிஎம் வங்கி தவறிவிட்டது. குறிப்பாக, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் விதிகளின் கீழ் செயல்படவில்லை என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
கேஒய்சி முறைகேடுகள்: வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் கடுமையான குளறுபடிகள் இருந்தன. ஒரு பான் கார்டை வைத்து ஆயிரக்கணக்கான கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டன.
நிர்வாகக் குறைபாடுகள்: வங்கியின் மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் நலனுக்கும், பொது நலனுக்கும் எதிராக இருந்ததாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உரிம நிபந்தனைகளை மீறுதல்: பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமம் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றவில்லை.
வாடிக்கையாளர்களுக்கு இதன் தாக்கம் என்ன?
உங்கள் பணம் பாதுகாப்பானது: வங்கியிடம் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைத் திருப்பி அளிக்கப் போதுமான நிதி இருப்பதாக ஆர்பிஐ உறுதி அளித்துள்ளது.
பேடிஎம் ஆப் மற்றும் பேடிஎம் யுபிஐ: நீங்கள் பயன்படுத்தும் பேடிஎம் ஆப், பேடிஎம் யுபிஐ, மொபைல் ரீசார்ஜ், பில் பேமெண்ட் போன்றவை வழக்கம் போல் செயல்படும். ஏனெனில் இவை இப்போது மற்ற வங்கிகளுடன் (ஆக்ஸிஸ், எஸ்பிஐ, யெஸ் வங்கி) இணைந்து செயல்படுகின்றன.
வாலட் மற்றும் பாஸ்ட்டேக்: பேடிஎம் வங்கியுடன் இணைக்கப்பட்ட வாலட்கள் மற்றும் ஃபாஸ்டேக் கணக்குகளில் புதிய பணத்தை இனி ஏற்ற முடியாது. ஏற்கனவே உள்ள பணத்தைப் பயன்படுத்தலாம் அல்லது காலியானதும் வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டியிருக்கும்.
அடுத்து என்ன நடக்கும்?
ரிசர்வ் வங்கி இப்போது இந்த வங்கியை முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கையை உயர் நீதிமன்றத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளது.இது பேடிஎம் வங்கிக்கு வைக்கப்பட்ட தடையே தவிர, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேடிஎம் செயலிக்கு வைக்கப்பட்ட தடை அல்ல. எனவே, நீங்கள் பயமில்லாமல் ஆப் மூலம் யுபிஐ பணப்பரிமாற்றங்களைச் செய்யலாம்.














Click it and Unblock the Notifications