தேர்தல் நேரத்தில் விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்! ஹைகோர்ட்டுக்கு ஓடிய காங்கிரஸ்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய வருகை தரும் போது, அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக காங்கிரஸ் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அனுப்பிய மனுவில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்கு சேகரிக்கும் உள்நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், விவேகானந்தர் பாறை, பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்க கூடாது எனவும், வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரியும் காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது, பதிவுத்துறை அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும். அல்லது, உயர் நீதிமன்றம் இந்த மனுவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications