1996 வரலாறு திரும்புதா? சத்தியமூர்த்தி பவனின் ஆவேசமும், அறிவாலயத்தின் பிடிவாதமும்! மைனஸ் திமுகவுக்கா
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு விவகாரத்தால் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி முறிந்துவிடுமா? என்றுகூட சந்தேகங்கள் வலுக்க துவங்கிவிட்டன.. ஒருவேளை திமுகவுடனான கூட்டணி உடையும் பட்சத்தில், அது காங்கிரஸுக்கு சாதகமான சூழலை பெற்றுத்தருமா?? திமுக இல்லாத காங்கிரஸ் எப்படி இருக்கும்? காங்கிரஸ் இல்லாத திமுக எப்படி இருக்கும்?
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு விவகாரத்தால் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில், 35 முதல் 39 தொகுதிகள் வரை வேண்டும் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் வெறும் கணக்குகள் அல்ல; அரசியல் மரியாதை மற்றும் எதிர்கால நிலைப்பாட்டின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன என்பது அரசியல் வட்டாரங்களின் கருத்தாக உள்ளது.
ராகுல் காந்தி - ஸ்டாலின்
இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நடிகர் விஜய்யின் தவெக காங்கிரஸுக்கு 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பிருந்தே தகவல் வெளியாகி வருகிறது.. இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தாலும், அரசியல் கணக்கீடுகளில் இது முக்கிய அசைவாகவே கருதப்படுகிறது.
ஒருபுறம் திமுகவுடன் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் கூறினாலும், மறுபுறம் தவெக-வுடன் நடக்கும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சந்தேகத்தை வலுப்படுத்தியவண்ணம் உள்ளன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இந்த ஆலோசனைகள் வெறும் தொகுதி எண்ணிக்கையைத் தாண்டி, கூட்டணியின் எதிர்கால வடிவமைப்பை பற்றியதாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொகுதி பங்கீடு
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மூண்டுள்ள தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது ஒரு கௌரவ போராட்டமாகவே உருவெடுத்துள்ளது. கடந்த காலங்களில் திமுக வழங்கிய இடங்களை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், இந்த முறை 35 முதல் 39 தொகுதிகள் வரை வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பது கூட்டணியின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்துள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் உள்ளது அரசியல் மற்றும் தேசிய அளவிலான தன்னம்பிக்கை உயர்வின் பிரதிபலிப்பாகவும் சிலர் பார்க்கின்றனர்.
இந்த சூழலில் திமுகவை விட்டு காங்கிரஸ் வெளியேறினால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நீண்டகாலமாக திமுகவின் நிழலிலேயே பயணிப்பதாக விமர்சிக்கப்படும் காங்கிரஸிற்கு, தவெக போன்ற புதிய சக்திகளுடன் இணைவது அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கெடுக்கும் அதிகாரத்தையும் பெற்றுத்தர வாய்ப்புள்ளது. ராகுல் காந்தியின் தேசிய அளவிலான பிம்பமும், விஜய்யின் இளைய தலைமுறை வாக்கு வங்கியும் இணைந்தால் அது ஒரு வலுவான கூட்டணியாக உருவெடுக்கும்.
காங்கிரஸ் முடிவு?
இதன் மூலம் தமிழகத்தில் இழந்த தனது செல்வாக்கை காங்கிரஸ் மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்யலாம். குறிப்பாக, தென் மாவட்டங்களில் காங்கிரஸிற்கு இருக்கும் பாரம்பரிய வாக்குகள், தவெக-வின் எழுச்சியோடு சேரும்போது அது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், இந்த கணக்கு தரை மட்டத்தில் வாக்கு பரிமாற்றமாக மாறுமா என்பது இன்னும் பரிசோதிக்கப்படாத அரசியல் சமன்பாடாகவே உள்ளது.
இருந்தாலும், இந்த விலகல் என்பது காங்கிரஸிற்கு சில பின்னடைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். திமுகவின் வலுவான அடிமட்டக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் மேலாண்மை நுணுக்கங்கள் இல்லாமல் களமிறங்குவது காங்கிரஸிற்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்.
மேலும், மதச்சார்பற்ற வாக்குகள் சிதறுவது மறைமுகமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்ற அச்சமும் உள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் பாரம்பரியமாக திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்து வரும் நிலையில், இந்த விரிசல் அந்த வாக்கு வங்கியில் குழப்பத்தை விளைவிக்கலாம்.
சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகள்
திமுகவின் வெற்றியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் இல்லாதபோது, இந்த வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.
இந்தச் சிக்கல்களை கருத்தில் கொண்டுதான் முதல்வர் ஸ்டாலின் தற்போது மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் வெளியேறினால் அது ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையும் மாற்றியமைக்கும் என்பதால், அவர்களை தக்கவைக்க திமுக இறுதிநேர சமரச முயற்சிகளிலும் இறங்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதேவேளை, காங்கிரஸும் தன்னுடைய அரசியல் எடையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தமிழக தேர்தல் களம் ஒரு மும்முனைப் போட்டி
இந்த இழுபறி நீடித்தால் தமிழக தேர்தல் களம் ஒரு மும்முனைப் போட்டியாகவோ அல்லது புதிய கூட்டணிகளின் சங்கமமாகவோ மாறக்கூடும்.
காங்கிரஸ் எடுக்கும் அந்த ஒரு முடிவு, தமிழகத்தில் திமுகவின் ஆதிக்கத்தைத் தொடரச் செய்யுமா அல்லது புதிய மாற்றத்திற்கு வித்திடுமா என்பது தெரியவில்லை. அதேபோல் அறிவாலயத்தின் பிடிவாதம் காங்கிரஸை அமித் ஷாவின் வியூகத்திற்கோ அல்லது விஜய்யின் புதிய அரசியலுக்கோ தள்ளிவிடுமா என்பதும் தற்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
மொத்தத்தில், இது வெறும் தொகுதி எண்ணிக்கையின் சண்டை கிடையாது, தமிழக அரசியலின் அடுத்த கட்ட திசையை நிர்ணயிக்கும் பரிசோதனை. கணக்குகள் சரியாக அமையுமா, அல்லது உணர்ச்சிகள் மேலோங்குமா என்பது தான் இப்போது அனைவரும் கவனித்து பார்க்கும் அம்சமாக மாறியுள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்று உறுதியாகிறது.. மகிழ்ச்சியான செய்தி காலை வந்தது.. கோபண்ணா பேட்டி! -
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுத்த சிதம்பர முயற்சி.. ஒரே நாளில் பிரச்சனையை முடித்த ப.சிதம்பரம் -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
சிட்டிங் எம்எல்ஏ நாகை மாலிக்கு 3 வாய்ப்பும் ஓவர்.. கீழ்வேளூர் தொகுதியில் களமிறங்கும் பெ.சண்முகம்? -
விறுவிறு திமுக.. இன்று கமல் கட்சியுடன் தொகுதி பங்கீடு.. அதிகபட்சமே "இவ்வளவு" சீட் தானாம்! -
நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்.. ராகுலை எதிர்க்க முடிவெடுத்த ஸ்டாலின்.. போர் ஆமாம் போர்! -
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது? -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
டெல்லி பப்புன்னு சொன்னப்ப..ராகுல் வெயிட்டேஜை கூட்டிய ஸ்டாலின்! துரோகம் செஞ்சிட்டீங்க! திமுக கொதிப்பு -
விஜய்க்கு ரசிகர் கூட்டம் இருக்கு.. ஆனால் திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. கார்த்தி சிதம்பரம் கறார் -
தமிழக தேர்தல் வரலாறு: இரண்டே திட்டங்கள்.. காங். ஆட்சிக்கு உலை வைத்த ராஜாஜி.. 1953இல் நடந்தது என்ன? -
மாலை மகள் நிச்சயதார்த்தம்.. மதியம் ஸ்டாலினுடன் பேச்சு.. திமுக கூட்டணிக்காக போராடும் செல்வப்பெருந்தகை












Click it and Unblock the Notifications