ஆரம்பமே அமர்க்களம்! 108 இடங்களின் நாயகன் விஜய்க்கு கம்யூனிஸ்டு கட்சி கொடுத்த சர்ப்ரைஸ் சர்டிபிகேட்
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று சட்டசபை கூட்டம் தொடங்கியிருக்கும் நேரத்தில், கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் முதல்வர் விஜயை காமராஜர், அண்ணா உறவோடு ஒப்பிட்டு பாராட்டியது சட்டசபை வளாகத்திலேயே பேசுபொருளாக மாறியது.. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கும் கம்யூனிஸ்டு கட்சி இந்த அளவிற்கு விஜயை வரலாற்று ஒப்பீட்டுடன் பாராட்டியது கூட்டணி அரசியலின் புதிய கோணத்தை காட்டுகிறது..
தமிழகத்தில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. முதல் நிகழ்வாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.. யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜேசிடி பிரபாகரனும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்..

செங்கோட்டையன் - உதயநிதி ஸ்டாலின்
மரபுபடி அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஜேசிடி பிரபாகரனின் இரு கைகளையும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.. அதைத் தொடர்ந்து முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட சட்டமன்ற கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசினர்.
சபாநாயகர் தேர்வை தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்துரைகளின் போது ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்..
முதல் நாள் வாழ்த்துரைகள்
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் அவை நடவடிக்கைகள் மீது உறுப்பினர்களும் அதிகாரிகளும் அதிக கவனம் செலுத்தினர்.
குறிப்பாக பல கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் இணக்கமான சூழலில் பேசியது அவையில் கவனத்தை ஈர்த்தது.. முதல் நாளிலேயே கடுமையான விவாதங்கள் இல்லாமல் வாழ்த்துரைகள் மற்றும் மரியாதை நிகழ்வுகள் நடைபெற்றதால் சட்டசபை வளாகத்தில் அமைதியான சூழல் காணப்பட்டது..
கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன்
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் பேசியது அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டது.. "காமராஜரை சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்றது போல, திமுக தலைவர், மதிமுக பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் தலைவர், பாமக தலைவர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர், இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை முதல்-அமைச்சர் விஜய் பாதுகாத்து இருக்கிறார். மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு ஆரம்பமே அமர்க்களப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.
ஆரம்பமே அமர்க்களம்
ராமச்சந்திரனின் இந்த வாழ்த்துரை சபையில் கைதட்டல் பெற்றது.. அதுமட்டுமல்ல கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ ஒருவர் படத்துறை பின்னணி கொண்ட முதல்வரை இந்த அளவிற்கு வரலாற்று ஒப்பீட்டுடன் பாராட்டியது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காமராஜர், அண்ணா உறவை நினைவுபடுத்தும் விதத்தில் விஜயை ஒப்பிட்டது கூட்டணி அரசியலின் இன்றைய சூழலை தெளிவாக காட்டுகிறது.
சட்டசபை முதல் நாளிலேயே சபாநாயகர் தேர்வு, கட்சிகளின் வாழ்த்துரைகள் என பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில், அடுத்தடுத்த அவை நடவடிக்கைகள் எப்படி செல்லும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.. புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் முதல் கூட்டத் தொடரின் ஒவ்வொரு நிகழ்வும் உறுப்பினர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகிறது...!!












Click it and Unblock the Notifications