அவதூறு..தமுப வீரலட்சுமி, சேலம் திருச்சி பெண் போலீசார் புகார்! சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்கு!
சென்னை : காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி, இரு பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் சில தினங்களுக்கு முன்பு அவர் தேனியில் இருந்த போது கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவதூறு பேச்சு: இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில் காவல்துறையினர் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர். சைபர் கிரைம் வழக்கு, கஞ்சா வழக்கு இருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்தார். பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது புதியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோலமாவு சந்தியா' என்ற பெயரில் இழிவாக கட்டுரை எழுதியதாக அவர் கூறியிருந்தார்.
மேலும் ஒரு வழக்கு: மேலும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் சவுக்கு சங்கர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சங்கர் மீது மேலும் இரு பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீரலட்சுமி: தமிழக பெண் காவலர்களை இழிவாக பேசிய யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி(ஆபாசமாக திட்டுதல்), 506 (1)( மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 பிரிவுகள்: இது மட்டுமல்லாமல் திருச்சி மாநகரச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 வழக்குகள்: இதுபோல சேலம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா அளித்த புகாரின் பேரிலும் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை சைபர் கிரைம் வழக்கு, தேனி கஞ்சா வழக்கு, பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகார், வீரலட்சுமி புகார் மற்றும் இரு பெண் போலீசார் அளித்த புகார் என மொத்தம் ஆறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ளது. இதில் இரு வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் மற்ற நான்கு வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications