பாகிஸ்தான் பிரிவினையை நேரில் பார்த்தவர்! இந்திய வெறியர் சர்ச்சில்; அன்பான அட்லி! ஆச்சரிய தகவல்கள்
சென்னை: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் பற்றிய நினைவுகளை ஹெ.வி. ஹண்டே பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை நாம் கடந்திருக்கிறோம். இந்திய விடுதலை என்பது பாடத் திட்டப் பகுதியில் உள்ளதைப்போல இல்லை. அதில் இல்லாத பல தகவல்கள் இந்தியச் சரித்திர பக்கங்களில் ஒளிந்துள்ளது. இன்றைய இளம் தலைமுறை அதைப் பற்றி தேடிப் படிப்பது மிகக் குறைவாகவே உள்ளது.

இந்திய விடுதலை இயக்கத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர் ஹெச்.வி. ஹண்டே. இப்போது அவருக்கு 96 வயதாகிறது. நேரு, ராஜாஜி, அம்பேத்கர் போன்ற மிகப்பெரிய தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரத்திற்காகப் போராடியவர். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்.
இந்தியா விடுதலைப் பெற்ற போது நேரடி சாட்சியாக இருந்த இவர் தனது அனுபவங்களை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஹண்டே பேசுகையில், “கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று ’வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வார்தா ஆசிரமத்தில் மகாத்மா காந்தி அவர்கள் இதற்கான அறைகூவலை விடுத்தார். இந்தப் போராட்டத்தை மார்ச் மாதமே ஆரம்பிக்கலாம் என முதலில் காந்தி, நேரு, ஆச்சார்ய கிருபளானி போன்ற தலைவர்கள் எல்லாம் கூடி முடிவெடுத்திருந்தனர்.
அப்போது சீனாவின் ராணுவ தளபதியாக இருந்த சியாங் காய்-ஷேக் உடனடியாக நேருவுக்கு போன் செய்தார். 'ஜப்பான் நாட்டுக்கு எதிராக இருந்தார். ஆகவே, நாம் பிரிட்டிஷைப் பகைத்துக் கொள்ள வேண்டுமா? யோசித்து முடிவு எடுங்கள்’ என அந்தக்கால பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. நேருவும் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அதற்குக் காந்தி இணங்கவில்லை. யார் விரும்புகிறார்களோ அவர்கள் போராட்டத்தில் பங்கேற்கலாம். யாரையும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்று கூறிவிட்டார்.
காந்தியின் இந்தப் போராட்டம் தேவையற்றது என்று அவரிடமே ராஜாஜி மட்டுமே தெரிவித்தார். ஏனெனில் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்திருந்துவிட்டார். விடுதலை பற்றி ஆராய கிரிப்ஸ் தூதுக்குழு கூட அமைக்கப்பட்டு விட்டது. அதை நாம் ஏற்றுக் கொள்வோம். இல்லை எனில் ஜின்னாவின் கை ஓங்கிவிடும் என்றார். ராஜாஜி தைரியமானவர். தனதுக்கு உடன்பாடு இல்லை என்றால், அதை நேரடியாகக் காந்தியிடம் கூறும் அளவுக்கு இருந்தவர். அதை உணர்ந்துதான் காந்தி, 'என் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்’ என ராஜாஜி குறித்துச் சொன்னார்.
இந்நிலையில்தான் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாம்பேயில் கடற்கரையில் பெரிய ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காந்தி, நேரு, பட்டேல், அபுல் கலாம் ஆசாத் என அனைவரும் பங்கேற்றனர். மாலை 7:30 மணிக்கு போலீஸ் வந்த அனைவரையும் கைது செய்து விக்டோரியா டெர்மினஸ் கொண்டு போய் அடைத்துவிட்டனர். காந்தியை புனாவில் உள்ள ஆகா கான் பேலஸ் கொண்டு போய் வைத்துவிட்டது போலீஸ். மற்ற தலைவர்களை வேறுவேறு பகுதிக்குக் கொண்டு போய் அடைத்துவிட்டனர். இதனிடையே 1943இல் காந்தியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்றும் நடந்தது. ஆகவே உடனடியாக காந்தியை விடுதலை செய்துவிட்டனர்.
1942இல் இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது வின்செண்ட் சர்ச்சில்தான் இந்தியாவின் பிரதமர். 1945 மே 8 ஆம் தேதி ஹிட்லர் கதை முடிவுக்கு வந்தது; பிரிட்டிஷ் படைப் போரில் வென்றது. இந்த வெற்றி சர்ச்சிலுக்கு மகிழ்ச்சியை தந்தது. உடனே அவர் இந்தியாவில் தேர்தலை அறிவித்தார். தேர்தலில் அவர் மட்டும் வென்றார். அவர் கட்சி தோல்வியைத் தழுவியது. மே மாதம் இரண்டாம் உலகப் போர் முடிந்தது. செப்டம்பரில் கிளமென்ட் அட்லி பிரதமரானார். உடனடியாக அட்லி அதிகாரத்தை லண்டனிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற வேண்டும் என ஒரு அறிக்கைவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. அப்போது மஞ்சள், சிகப்பு, பச்சை என மூன்று வாக்குப் பெட்டிகள் வைப்பார்கள். மஞ்சள் காங்கிரஸ் பெட்டி. சிகப்பு ஜஸ்டிஸ் பார்ட்டி பெட்டி. பச்சை முஸ்லிம் லீக் பெட்டி. அந்தக் காலத்தில் 11 மாகாணங்கள் இருந்தன. இதில் ஹைதராபாத், மைசூர் சமஸ்தானம் சேர்க்கப்படவில்லை. இந்த 11இல் 7 இடங்களில் காங்கிரஸ் வந்தது. 4இல் முஸ்லிம் லீக் வென்றது. உடனே அட்லி, 'முழு அமைச்சரவையில் இந்தியர்களுக்கு மட்டுமே இடம்’ என்று அறிவித்தார். அதைப் பற்றி விரிவாக ஆராய எம்மெலின் பெதிக்-லாரன்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார். அதற்கு கேபினட் மிஷன் என்று பெயர். இந்தக் குழு இந்தியத் தலைவர்களைச் சந்தித்து கருத்துக் கேட்டது.
சென்னை மாகாணத்திற்கு 48 உறுப்பினர்கள் இருந்தனர். பாம்பே மாகாணத்திற்கு 46 உறுப்பினர்கள். உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட யுனைடெட் மாகாணத்திற்கு 52 உறுப்பினர்கள். பெங்கால் மாகாணத்திற்கு 60 உறுப்பினர்கள். இதில் அம்பேத்கர் சட்டப்பேரவைக்குப் பாம்பே மாகாணத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், இங்கிலாந்திற்குச் சென்ற பிரதிநிதியில் பிரிமீயர் பதவியில் உள்ளவர்களே செல்ல முடியும். அதனால் அம்பேத்கரை அழைக்கவில்லை.
ஜோகேந்திர நாத் மண்டல் என்பவர் அகில இந்தியப் பட்டியலின மக்களின் தலைவராக இருந்தர். இவர்தான் கிழக்கு பெங்கால் டாக்காவின் பிரதிநிதியாக அம்பேத்கரை அரசியலமைப்பு சபை போட்டார். இந்த அரசியலமைப்பு சபை டிசம்பர் 9 ஆம் தேதி 1946 முதன்முதலாகக் கூடியது. இதற்கு முன்பாகவே செப்டம்பர் 5 ஆம் தேதியே இந்தியாவில் இடைக்கால அரசை அட்லி அமைத்தார். அதில் 5 பேர் முஸ்லிம் லீக். 5 பேர் காங்கிரஸ் என மொத்தம் 13 பேர் கொண்ட அமைச்சரவையைத் தொடங்கப்பட்டது.
முதலில் ஜின்னா இதை ஏற்க மறுத்தார். பின்னர் தங்களுக்கே நஷ்டம் என்று நினைத்து ஏற்றுக் கொண்டு நிதித்துறை அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டும் என்றார். பலரும் உள்துறை கேட்பார் எனப் பயந்து கொண்டிருந்தனர். இவர் நிதியைக் கேட்டதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் நேரு. இது என்ன ஆனது என்றால் எந்த ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு நிதியமைச்சர் ஒப்புதல் தரவேண்டும். அவர் கையெழுத்து இல்லாமல் எதுவும் நடக்காது. நிதியமைச்சர் பதவி ஜின்னா கட்சி கையில் உள்ளது. அப்போதுதான் மிகப்பெரிய தலைவலி வந்தது. எப்படியாவது நாட்டை பிரித்து பாகிஸ்தான் கொடுத்துவிடலாம் என நினைத்தனர்.
ஆனால், காந்தி எனது சடலத்தின் மீதுதான் பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் என்றார். அப்போது ராஜாஜி, 'பிரிவினை வேண்டாம் தான். ஆனால், அதை நம்மால் தடுக்க முடியாது' என்று காந்திக்குப் புரியவைத்தார். அதன்பின்னர் காந்தியை அதை ஏற்றார். இதற்கு சிஅர் பார்முலா 1944 என்று பெயர். சி.ஆர் என்றால் சி.ராஜகோபாலாச்சாரியார் என்று அர்த்தம். அவர் முன்வைத்த பிரிவினை யோசனைக்கு இந்தப் பெயர். இதற்கு நடுவே பஞ்சாப் மாகாண அரசு முழுமையாகப் பாகிஸ்தானுடன் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
அங்கே முஸ்லிம் லீக்தான் பெரும்பான்மை. தீர்மானம் வெற்றி பெற்றது இயற்கையானது. இதை ராஜாஜி ஏற்கவில்லை. 1941இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பஞ்சாபில் எந்த மாவட்டங்களில் எல்லாம் முஸ்லிம் அதிகமாக உள்ளனரோ அதை மட்டுமே பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கி ராஜாஜி அதற்குக் காந்தியைச் சம்மதிக்க வைத்துவிட்டார். ஆனால், ஜின்னா அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பிரதமர் அட்லி இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை 1948க்குள் முடிக்க வேண்டும் என மவுண்ட்பேட்டன் பிரபு கட்டளையிட்டுவிட்டார். இதற்காக மவுண்ட்பேட்டன் 1946இல் இந்தியா வந்தார். இவரை உடனே ராஜாஜி போய் சந்தித்து பஞ்சாபை மொத்தமாகப் பாகிஸ்தானுக்கு தரக்கூடாது என வலியுறுத்தினார். பேட்டன் அதை ஏற்றுக் கொண்டார். சிஆர் பார்முலா என்று இருந்தால் எதிர்ப்பு வரும் என உணர்ந்த பேட்டன் அதற்கு மவுண்ட் பேட்டன் பார்முலா எனப் பெயரை மாற்றி அமைத்தார்.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. நாட்டில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. மக்கள் கும்பல் கும்பலாக இடம்பெயர்ந்தனர். காந்தி சுதந்திர விழாவில் கலந்து கொள்ளாமல் நவகாளிக்குப் போனார். இந்தியா ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்தது என்று சொன்னாலும் அது சுகப் பிரசவம் இல்லை. நாடே ரத்தக் களரியாக இருந்தது” என்கிறார்.












Click it and Unblock the Notifications