கோட்டைக்குள் நுழையும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி.. விஜய் வழங்கும் முக்கிய அரசு பதவி
சென்னை: சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜயுடன் 9பேர் அமைச்சராக பதவியேற்றனர். நேற்று மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளது. அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே விஜயின் ஜோதிடர் ராதன் பண்டிட் என்பவருக்கு அரசு பதவி வழங்கியது சர்ச்சையானது. இந்நிலையில் முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் பரபரப்புகள் ஓயவில்லை. ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. திமுகவின் கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

தமிழக அரசியல் சூழல்
கம்யூனிஸ்ட்கள் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மதிமுகவும் விஜயின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறது. அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக முயற்சி செய்ததாக, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அவருக்கு எதிராக தர்மயுத்தம் 2.0 நடத்தி வருகிறார்கள்.
சர்ப்ரைஸ் என்ட்ரியாக வந்த தவெக ஆட்சியை பிடித்துவிட்டது. விஜய் முதலமைச்சராகியுள்ளார். சொல்லிக் கொள்ளுமளவுக்கு திட்டங்கள் வராவிடினும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. பதவியேற்பு விழாக்களில் வந்தே மாதரம் முதலாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள் பலரும் ரீல்ஸ் மோகங்களில் உலா வருகிறார்கள்.
முதலமைச்சரின் ஆலோசகர்களாக
விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் அரசு ஆலோசராக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில் முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் வியூக வகுப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமியை முதலமைச்சரின் அரசியல் பிரிவு ஆலோசராக நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல விஜயின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டியை பொது விவகாரங்களுக்கான ஆலோசகர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகயுள்ளது. ஏற்கனவே ராதன்பண்டிட் நியமனம் சர்ச்சையான நிலையில், விஜய்க்கு நெருக்கமான இருவருக்கு அரசு பொறுப்பு வழங்கப்படுவது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.












Click it and Unblock the Notifications