குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்: பெண்களை இழிவாக சித்தரித்த சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது
குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 திட்டத்தை இழிவுபடுத்திய சவுக்கு சங்கர் ஆதரவாளர் கைது செய்யபப்ட்டார்.
சென்னை: தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 திட்டம் என்ற தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை இழிவாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். @voiceofsavukku என்ற பெயரில் யூடியூபர் சவுக்கு சங்கர் என்பவரை ஆதரித்து ட்வீட்டுகளை பதிவிட்டவர் பிரதீப்.

தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது தொடர்பான அறிவிப்பில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. திராவிடர் இயக்கத்தின் சமூக நீதி பார்வை கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு கல்விக்கான நிதி உதவி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 32,000 கோடி என்பதைத் தொடர்ந்து தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவி தொகை என்பது பெரும் பாராட்டப்படுகிறது.
ஆனால் சமூக நீதிக்கு எதிரானவர்கள் சமூக வலைதளங்களில் இந்த ரூ. 1,000 உரிமைத் தொகை திட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவர் AS.குமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் @voiceofsavukku என்ற ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வந்த பிரதீப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். @voiceofsavukku என்ற பெயரில் யூடியூபர் சவுக்கு சங்கர் என்பவரை ஆதரித்து பல்வேறு பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டவர் பிரதீப்.












Click it and Unblock the Notifications