இது ஆதார் இல்ல "அபார்".. ஒரே நாடு ஒரே அடையாள அட்டை.. மத்திய அரசின் அபார் கார்டு.. வெளியான புது தகவல்
சென்னை: நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் விவரங்களை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்களும், ஆவணங்களும் உருவாக்கப்பட்டு ஏகப்பட்ட மோசடிகள் நடப்பது அதிகரித்து வருகிறது.

போலி கல்வி சான்றிதழ்: இந்த போலி கல்வி சான்றிதழ்களை, எத்தனையோ பேர் முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள்.. பலர் அரசு வேலை பெறுவதற்காக இந்த போலி கல்வி சான்றிதழ்களை பயன்படுத்துகிறார்கள்.. அரசு பணியிலும் சேர்ந்துவிடுகிறார்கள்.. இதனால், பாடுபட்டு கல்வி கற்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
அதனால்தான், ப்ரீ கே.ஜி முதல் பிஎச்டி.வரை, போலி சான்றிதழ் முறைகேட்டை தடுக்கவும், மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டும், மத்திய அரசு புதிய அடையாள அட்டையை கொண்டுவந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டையை அறிமுகம் செய்யப்போகிறது.. இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைத்துள்ளது.. இந்த "அபார் ஐடி" திட்டத்தை கையிலெடுத்துள்ளது.
முறைகேடுகள்: ஆதார் கார்டில் இருப்பதை போலவே, அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும்.. மாணவர்களின் மதிப்பெண், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் அனைத்துமே, இந்த அபார் ஐடியில் இணைக்கப்பட்டு விடும். இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மாறுதல் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ID காண்பித்தாலே போதும், அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்..
மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் வழங்கப்படும். மாணவர்கள் எங்கே படிக்கிறார்கள்? கல்லூரிக்கு செல்கிறார்களா? அல்லது படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களா? போன்ற விவரங்களையும் இதன் அட்டை மூலம் கண்காணிக்க முடியும்.. ஒருவேளை பாதியிலேயே படிப்பை நிறுத்தினால், அதாவது பள்ளி இடைநிற்றலையும் இந்த அட்டையை கொண்டு தடுக்க முடியும்..
ரேஷன் கார்டுகள்: அந்தவகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு,ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட வரிசையில் தற்பொழுது ஒரே நாடு ஒரே மாணவன் திட்டம் அறிமுகமாக உள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இதற்கு கிடைத்து வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும்.

அபார் என்றால், "தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு" என்று அர்த்தம்.. சுருக்கமாக சொல்லப்போனால், அபார் அட்டையின் அடிப்படை தகவல்கள், அவர்களது ஆதார் தகவல்களில் இருந்தே எடுக்கப்பட்டதாக இருக்கும்.
கல்வித்துறை அதிகாரிகள் இதை பற்றி சொல்லும்போது, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் கருத்து கேட்புக்கு பிறகே, இதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.. இதுகுறித்து, விரிவான அறிவிப்புகள் வரும் வருடம் துவக்கத்திலேயே வெளிவர உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications