"கனத்த இதயத்துடன்.. விசிகவில் இருந்து விலகுகிறேன்.." ஆதவ் அர்ஜுனா திடீர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா. கடந்த சில காலமாகவே இவரது பேச்சுக்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்புவதாக இருக்கிறது. சமீபத்தில் தான் அவரை 6 மாதம் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா.. அவரது நிறுவனம் விசிகவுடன் பணியாற்றி வந்த நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தான் விசிகவில் அவர் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

aadhav arjuna vck

ஆதவ் அர்ஜுனா: கட்சியில் இணைந்த ஒரு மாதத்திலேயே அவர் விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அளித்த பல்வேறு பேட்டிகள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. விசிக கடந்த பல ஆண்டுகளாகவே திமுக கூட்டணியில் தான் இணைந்து பயணித்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக திமுக குறித்து விமர்சித்தே வந்தார்.

குறிப்பாகச் சமீபத்தில் நடந்த அம்பேத்கர் குறித்த புத்தக விழாவில் அவரது பேச்சு பெரும் சர்ச்சையானது. அதில் திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார். இதையடுத்து விசகவில் இருந்து அவரை 6 மாத காலம் சஸ்பென்ட் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். இந்தச் சூழலில் தான் விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

கடிதம்: இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா எழுதியுள்ள கடிதத்தில், "நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன்.

சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

அதிகாரத்தை அடைய வேண்டும்: எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

அம்பேத்கர்: இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்படையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்... வாய்மையே வெல்லும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+